கஜா.. 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. 3 அடிக்கு கடல் நீர் மட்டம் உயரும்: வானிலை மையம்
Recommended Video
சென்னை: கஜா புயல் கரையை நெருங்கும்போது கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று பகல் 1 மணியளவில் நிருபர்களை பாலச்சந்திரன் வானிலை நிலவரம் குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கஜா புயல் இப்போது எங்கே மையம் கொண்டுள்ளது என்பது குறித்தெல்லாம் தெரிவித்தார்.
மேலும், பாலச்சந்திரன் அளித்த பேட்டியை பாருங்கள்:
[ரெட் அலெர்ட் அச்சப்படுத்த இல்லை முன்எச்சரிக்கைக்காக... ஆர். பி. உதயகுமார் விளக்கம்!]
நவம்பர் 14 இரவு முதல் மழை
நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில், புயல் மையம் கொண்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி பிற்பகல், நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ஆம் தேதி இரவு முதல், புயல் கரையை கடக்கும் வரை, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், புதுச்சேரி விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்.
நூறு கிலோ மீட்டர்
புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 அல்லது சில சமயங்களில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் வரும் 15ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கன மழை
கனமழையை பொறுத்தளவில், தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல், மிக கனமழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் மிக மிகக் கனத்த மழை பெய்யக்கூடும்.
1 மீட்டர் உயரம்
கடல் நீர் மட்டம் உயர்வதை பொறுத்தளவில், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை விட ஒரு மீட்டர் (3 அடி) அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரக் கூடும். சென்னையை பொறுத்த அளவில், அதிக அளவிலான வேகத்தில் காற்று வீச வாய்ப்பு கிடையாது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.