ரெட் அலெர்ட் அச்சப்படுத்த இல்லை முன்எச்சரிக்கைக்காக... ஆர். பி. உதயகுமார் விளக்கம்!
Recommended Video

மதுரை: கஜா புயலை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 30 ஆயிரத்து 500 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் கஜா புயல் பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. சென்னையில் இன்று வானிலையில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் நாளை முதல் கனமழை பெய்யும், நவம்பர் 15ல் புயல் கரையை கடக்கும் என்ற செய்திகள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
ஆந்திரா சென்னைக்கு இடையே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் புயலை சந்திக்க தயாராகி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தயார் நிலையில் இருப்பதற்காக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் முன்எச்சரிக்கை
இந்நிலையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நிலை பற்றி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: கஜா புயல் முன்னெச்செரிக்கையாக கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்
தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

4,399 இடங்களில் வெள்ள அபாயம்
தமிழகம் முழுவதும் 4,399 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டு அங்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில மற்றும் தேசிய மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது.

மீட்பாளர்கள் தயார் நிலையில்
புயலின் வீரியத்திற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்படும்
கடலோர மாவட்டங்களில் 30 ஆயிரத்து 500 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். ரெட் அலர்ட் என்பது நிர்வாகத்திற்கு கொடுக்கப்படும் நிர்வாக எச்சரிக்கை என்பதால் மக்கள் அச்சப்படவோ பீதியடையவோ தேவையில்லை.

மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவர்களை கரை திரும்ப வலியுறுத்தப்பட்டதன் பேரில் மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications