"அதுதான்" பிரச்சனையே.. 3 சம்பவம்.. தேசிய அளவிற்கு போன காயத்ரி "வாய்ஸ்".. அண்ணாமலைக்கு எகிறிய பிரஷர்
சென்னை: காயத்ரி ரகுராம் வைத்த புகார் தொடங்கி திருச்சி சூர்யா விவகாரம் வரை 3 விஷயங்கள் தமிழ்நாடு பாஜகவில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 முக்கியமான விஷயங்கள் டெல்லி வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பாஜகவில் திடீரென உட்கட்சி பூசல் வெடித்து உள்ளது. லேசாக கனல் போல கனன்று கொண்டு இருந்த பூசல்.. காட்டுத்தீயாக கமலாலயத்தை சுற்றிவர தொடங்கி உள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சத்யமூர்த்தி பவனில் மண்டை உடைக்கும் அளவிற்கு கோஷ்டி மோதல் நடைபெற்றது.
வழக்கமாக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நடப்பது சகஜம்தான். ஆனால் பாஜகவும் தற்போது ஜோதியில் ஐக்கியம் ஆகி நானும் ரவுடிதான் என்று கூறி கோஷ்டி மோதலில் இறங்கி உள்ளது. கடந்த 2 வாரத்தில் நடந்த 3 சம்பவங்கள்தான் அந்த கட்சிக்கு மிகப்பெரிய விமர்சனத்தை தேடி தந்து உள்ளது.

சம்பவம் 1
முதல் விஷயம் - பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா தனது படிப்பை முடிக்கும் முன்பே கிளினிக் ஒன்றை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக போலீசிலும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதன்படி கரிஷிமா பியூட்டி கிளினிக் என்ற மருத்துவமனையை இவர் சிஇஓவாக இருந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர், நீங்கள் இன்னும் படித்தே முடிக்கவில்லையே. எப்படி கிளினிக் நடத்துகிறீர்கள். டிகிரி வாங்கும் முன் எப்படி நீங்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்க முடியும். டிகிரி இல்லாமல் நீங்கள் எப்படி டெர்மடாலஜி மருத்துவத்தை மேற்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்து உள்ளனர்.

புகார்
திமுகவினர் தந்த புகாரின்படி, அலிஷா கஸ்டமர்கள் மீது ஊசிகளைதான் பயன்படுத்தி இருக்கிறார். அவர் ஊசிகளை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது சட்டப்படி தவறு. ஏனென்றால் அவர் இன்னும் மாணவர்தான். அப்படி பயன்படுத்தவில்லை என்றால் ஊசிகளை வைத்து இருப்பது போல விளம்பரம் கொடுப்பதும் தவறு. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். அவரின் இணைய பக்கத்தில் இருக்கும் போட்டோவையும் திமுகவினர் பகிர்ந்து உள்ளனர்.

சம்பவம் 2
இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில்தான் இன்னொரு பக்கம் ரகுராம் விவகாரம் வெடித்தது. தமிழ்நாடு பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். கட்சி உள் விவகாரங்களை வெளிப்படையாக ட்விட் செய்து விமர்சனம் வைத்தார். முக்கியமாக காசியில் நடந்த தமிழ் சங்க கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை, புறக்கணித்துவிட்டனர் என்று ஆதங்கத்தை காயத்ரி ரகுராம் வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ட்விட்டரில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தலைவர் சொல்வதை கேட்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் இப்படி எல்லாம் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

போலி ட்விட்
முக்கியமாக பாஜகவில் சிலர் ட்விட்களுக்கு பொய்யாக லைக்ஸ் பெறுகிறார்கள். வார் ரூமை வைத்து பொய்யாக லைக்ஸ் வாங்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் தனக்கு எதிராக டிரெண்ட் செய்கிறார். கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். எங்களுக்கு எதிராக பெரிய வார் ரூம் செயல்படுகிறது. இதில் எங்களுக்கு எதிராக ட்விட் போடப்படுகிறது. இதை நான் தட்டி கேட்பேன் என்று காயத்ரி குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் பாஜகவில் நேற்று திருச்சி சூர்யா விவகாரம் பெரிதானது.

சம்பவம் 3
நேற்று திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சி சரண் என்ற பெண்ணிடம் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சிவா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் காயத்ரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.இதனால் காயத்ரி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலாக செயல்பட்டதாக 6 மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். பாஜகவில் மைனாரிட்டி நலப்பிரிவு தலைவராக இருக்கும் டெய்சி சரணை பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா போன் செய்து மிரட்டியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பேசுவது சூர்யாதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஆடியோ
இருப்பினும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க சூர்யாவிற்கு 1 வாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சூர்யா மீது விசாரணை நடத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார்.தமிழ்நாடு அரசியலை அந்த குறிப்பிட்ட ஆடியோ உலுக்கி உள்ளது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது.

டெல்லி
இந்த 3 விவகாரங்களும் அண்ணாமலைக்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. அதிலும் காயத்ரி விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தேசிய அளவில் ட்விட்டரில் அவர் பெயர் டிரெண்டாகி வருகிறது. அண்ணாமலைக்கு இது புதிய சிக்கலை கொடுத்துள்ளது. அதிலும் டெல்லியில் புகார் கொடுப்பேன். அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு இருக்கிறேன் என்றும் காயத்ரி கூறி இருப்பது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை இதை எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications