பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராமின் அடுத்த மூவ் என்ன? "அந்த" கட்சியில் இணைய போகிறாராமே
சென்னை: பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
பாஜகவில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காயத்ரி ரகுராம். இவருக்கும் கட்சி தலைமைக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது.
இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து பல்வேறு ட்வீட்களை காயத்ரி ரகுராம் போட்டிருந்தார். மேலும் திருச்சி சூர்யா- டெய்சி ஆடியோ விவகாரத்திலும் காயத்ரி தலையிட்டு சூர்யாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

6 மாதங்கள்
இந்த நிலையில்தான் காயத்ரியை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில் தன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என எதிர்பார்த்து அழைக்காத நிலையில் காயத்ரி ரகுராம் இன்றைய தினம் பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவில் இருந்த போது
பாஜகவிலிருந்து இருந்த போதே தன் கை காசை வைத்து வெளிநாட்டில் கஷ்டப்படும் தமிழர்களை மீட்டு தாயகம் திரும்ப வைத்துள்ள காயத்ரி நிறைய உதவிகளை பலருக்கு செய்துள்ளதாகவும் தனது பேட்டிகளில் கூறிவருகிறார். இதனால் அவர் அடுத்ததாக எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவிலிருந்து காயத்ரி விலகியதுமே அவர் திமுகவில் இணைந்துவிடுவார் என நெட்டிசன்களும் பாஜக நிர்வாகிகளும் சமூகவலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இணைய மாட்டார்
ஆனால் நமக்கு கிடைத்த தகவல்களின்படி அவர் திமுகவில் இணைய மாட்டார். காரணம் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அதே கட்சியில் இணைவது என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. மேலும் காயத்ரி திமுக பக்கம் செல்கிறார் என பாஜக நிர்வாகிகளே சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர். ஒரு விழாவில் திமுகவின் முக்கியஸ்தரை அவர் சந்தித்து பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனினும் இது எதேச்சையாக நடந்த சந்திப்பு என்றும் தான் அப்பாயின்மென்ட் போட்டு அந்த நபரை சந்திக்கவில்லை என்றும் காயத்ரி தெள்ளத்தெளிவாக தெரிவித்துவிட்டார்.

காங்கிரஸுக்கு வந்துவிடுங்கள்
அப்போதே காயத்ரியிடம் அந்த நிர்வாகிகள் காங்கிரஸுக்கு வந்துவிடுங்கள் என கூறியதாக தெரிகிறது. காயத்ரி ரகுராம் இது வரை தேர்தலில் கூட பங்கேற்றதில்லை. அவர் அந்தளவுக்கு முக்கியமானவரும் கூட! அவரை ஏன் காங்கிரஸ் அழைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். அதாவது காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு விலகிவிட்டார். அவர் விலகியதும் தமிழக காங்கிரஸில் பிரபலமான நடிகைகள் யாரும் இல்லை.

மாநிலங்களவை எம்பி
ஏற்கெனவே இருக்கும் நக்மாவும் மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அவர் அதிருப்தியில் இருக்கிறார். எனவே காயத்ரி காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் காங்கிரஸுக்கு தமிழகத்தில் ஓரளவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும். ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் கிண்டல் செய்யும் பாஜகவுக்கு காயத்ரி சுடசுட பதிலடி கொடுப்பார். இது பிரச்சாரத்திற்கும் பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என காங்கிரஸ் கருதுகிறது. காயத்ரியும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழக பாஜகவுக்கு எதிரான கருத்துகளை கூறுவார். காங்கிரஸ் கட்சி தேய்ந்து வந்தாலும் காயத்ரி அதன் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய முன் வரலாம் என தெரிகிறது. எனவே அவரும் காங்கிரஸ் கட்சியில் இணைவதைதான் விரும்புவார் என சொல்லப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியில் பல அவமானங்களை சந்தித்து பின்னர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜாவின் வியூகத்தையே காயத்ரியும் பின்பற்ற வாய்ப்புள்ளது. அண்ணாமலைக்கு எதிராக போலீஸ் புகார் கூற போவதாக காயத்ரி கூறி வரும் நிலையில் அவர் ஒரு தேசிய கட்சியில் உறுப்பினராக இருப்பதுதான் பாதுகாப்பானது என்பதையும் அவர் உணர்வார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications