"கருப்பு ஆடு".. பாய்ந்து வந்த காயத்ரி.. நைட் முழுக்க அப்படி சொல்லிட்டு.. காலையில் பார்த்தா ட்விஸ்ட்!
சென்னை: பாஜகவில் தனக்கு பதவி பறிக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் வரிசையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தனது பதவி பறிக்கப்பட்டது குறித்து பல்வேறு விளக்கங்களை அவர் வழங்கி வருகிறார்.
பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவில் கட்சி ரீதியாக நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நிர்வாகிகளை மாற்றி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

பாஜக மாற்றம்
சமீபத்தில்தான் பாஜகவில் 40 மாவட்டங்களில் பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். தற்போது பல பொறுப்புகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பார்வையாளர்களாக கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்; இணைப் பொருளாளராக எம்.சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காயத்ரி நீக்கம்
கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் தனது பதவி பறிக்கப்பட்டது பற்றி காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு ட்விட்களை போட்டு வருகிறார். நேற்று பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில், எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று காயத்ரி ரகுராம் போஸ்ட் செய்து இருந்தார்.

சர்ச்சை
இந்த ட்விட் பெரிய சர்ச்சையானது. தனது பதவி நீக்கப்பட்ட நிலையில், தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இப்படி சொல்கிறாரோ என்று விவாதம் அவரின் கமெண்ட் பாக்சில் நடைபெற்றது. மற்ற ட்விட்களில் நான் 8 வருடமாக இந்த போராட்டத்தை நடத்தி வருகிறேன். அந்த சண்டை தொடரும். நான் நம்பிக்கையை இழக்க மாட்டேன்... பாஜகவும், அதன் மக்களும் கடல் போன்றவர்கள். அவர்களுக்காக நான் உழைத்துக்கொண்டே இருப்பேன், என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கருப்பு சொன்னார்
இன்னும் சில ட்விட்களில், வாழ்க்கை ஒரு வட்டம் இங்க ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்கிறவன் ஜெயிப்பான் என்றும் சாடலாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இன்னொரு ட்விட்டில், நான் கட்சியில் நீக்கப்படும் விஷயம் 1 மாதத்திற்கு முன்பே வெளியாகிவிட்டது. நல்ல விக்கெட் காலியாகிவிட்டது. இது எப்படி வெளியே தெரிந்தது. இதை வெளியே சொல்லும் கருப்பு ஆடு யார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே காயத்ரி ரகுராம் பதவி நீக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு முழுக்க என்ன நடந்தது?
இந்த நிலையில் நேற்று இரவு இதுபோல தனது பதவி பறிக்கப்பட்டது பற்றி பல போஸ்டுகளை அவர் போட்டு வந்தார். இந்த நிலையில்தான் இன்று காலை புதிய திருப்பமாக, தனக்கு வேறு பதவி கொடுக்கப்பட்டதாகவும். ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பிற மொழி நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளராக பாஜகவில் பதவி வழங்கப்பட்டது. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பிற மொழி தெரியாது
எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது. அதனால் நான் அந்த பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அந்த பதவிக்கு நேர்மையாக இருக்க முடியாது. மற்ற மொழிகள் என்னுடைய வலிமை கிடையாது. எனக்கு பதவி அவசியம் இல்லை. பதவி இல்லாமலே நான் இருக்க தயார் என்று காயத்திரி ராகுராம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications