மாணவர்களிடையே சாதி ரீதியான வெறுப்புணர்வு நாட்டை பின் நோக்கி தள்ளும்! ஜி.கே.வாசன் கவலை!
சென்னை: மாணவர்களிடையேயான சாதி ரீதியான வெறுப்புணர்வு நாட்டை பின்நோக்கி தள்ளிவிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கவலை தெரிவித்துள்ளார்.
அரசும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை நல்வழிப் படுத்தக் கூடிய, நன்மைபயக்க கூடிய வழிமுறைகளை போதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜிகே வாசன் கூறியிருப்பதாவது;

''நாங்குநேரியில் நடந்த சம்பவம் சாதிப் பிரச்சினை அடிப்படையில் நடந்துள்ளது. குறிப்பாக மாணவர்களிடையே இது போன்ற உணர்வு ஏற்படக் கூடாது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
மாணவர்களிடையே சாதி ரீதியான வெறுப்புணர்வை யாரும் தூண்டக் கூடாது. இது போன்ற சம்பவங்களும், எண்ணங்களும் நாட்டை பின்நோக்கி தள்ளிவிடும், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். வருங்காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும்; எண்ணங்களும் ஏற்படாதவாறு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அரசு பள்ளிக் கல்வித்துறையும் சரி, அரசு பள்ளியின் தலைமையும் சரி இதுபோன்ற சம்பவங்களில் தொடர் கண்காணிப்புத் தேவை. மாணவர் சமுதாயம் வருங்கால இந்தியாவை உருவாக்க கூடிய சமுதாயம்.
அரசும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை நல்வழிப் படுத்தக் கூடிய, நன்மைபயக்க கூடிய வழிமுறைகளை போதிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications