தமிழ் மாநில காங்கிரசுக்கு 6 சீட்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டி! லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ்
சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.
ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

12 தொகுதிகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உள்ளதாக கூறப்பட்டது. சைக்கிள் சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் 12 தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ஜிகே வாசன்.

தேமுதிக விவகாரம்
ஆனால், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருக்குமா இல்லையா என்ற ஒரு இழுபறி நிலை இருந்ததால் தமிழ் மாநில காங்கிரசுக்கு அத்தனை தொகுதிகள் ஒதுக்க அதிமுக யோசித்து வந்தது. இப்போது தேமுதிக இந்த கூட்டணியில் இல்லை.

இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, இன்று இரவு சென்னையில் இரவு எடப்பாடி பழனிச்சாமியை வாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய வாசன், 6 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்படும் என்று அறிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரசுக்கு 6
தமிழ் மாநில காங்கிரசுக்கு, திருவிக நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி மற்றும் கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே லால்குடியில் அதிமுக தனது வேட்பாளராக ராஜாராம் என்பவரை, அறிவித்து விட்டது. இப்போது தமிழ் மாநில காங்கிரசுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியுள்ளதால், தனது வேட்பாளரை வாபஸ் பெற உள்ளது. இதனால் லால்குடி அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications