செலவுக்கு ஒரு "25C" தாங்க.. போன் போட்ட வாசனிடம் கறார் காட்டிய எடப்பாடி! பாஜகவை கைகாட்டிய அதிமுக
சென்னை: அதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிச்சாமியிடம் தேர்தல் செலவு தொடர்பாக நீண்ட நேரம் ஃபோனில் பேசிய சங்கதிகள் தற்போது தெரியவந்துள்ளது. வாசனின் வைத்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்திருப்பதாக த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன் சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறது த.மா.கா.

துவக்கத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாசனை வலியுறுத்தினார் எடப்பாடி. இதற்கு ஒப்புக்கொள்ளவும் செய்தார். அதேசமயம், இதனையறிந்த பாஜக தலைமை, வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாமரை சின்னத்தில் போட்டியிட சம்மதிக்க வைத்தது. இதற்கு எடப்பாடியிடமும் என்.ஓ.சி. பெற்றது பாஜக.
தேர்தல் செலவு
இந்த நிலையில், 5 தொகுதிகளில் போட்டியிடும் த.மா.கா., ஒட்டன் சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணியையும், ஈரோடு மேற்கில் முத்துசாமியையும், ராணிப் பேட்டையில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியையும் எதிர் கொள்கிறது. இந்த தொகுதிகளில் அமைச்சர்களையும் அமைச்சரின் வாரிசையும் எதிர்த்து ஜெயிக்கிறோமோ இல்லையோ எதிர்பதற்குரிய பணம் பலமாவது வேண்டும் என்று வாசனிடம் அக்கட்சியினர் விவாதித்தனர். த.மா.கா. வேட்பாளர்களும் தேர்தல் செலவுக்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
25சி கேட்ட வாசன்
இதனை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன். அப்போது, ''மூன்று தொகுதிகளில் திமுக வின் பணபலம்-அதிகார பலம் கொண்ட ஜாம்பவான்களை எதிர்கொண்டாலும் 5 தொகுதிகளுமே எங்களுக்கு மிக போராட்டம் தான். 5 தொகுதிகளிலும் கணிசமாக தேர்தல் செலவுகளுக்கான தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்போதுதான் சமமான போட்டியை ஏற்படுத்த முடியும். அதனால் தொகுதிக்கு 5 சி என்று 25 சி கொடுத்து உதவ வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
பாஜகவிடம் கேளுங்கள் - எடப்பாடி
அதற்கு, ''இதா பாருங்கள் வாசன்... இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தேர்தல் செலவுகளை அதிமுக ஏற்றுக் கொண்டிருக்கும் அதுதான் நடக்கலையே. தாமரையில் நிற்கிறீங்க. டெல்லியிடம் (பாஜக) கேளுங்கள். டெல்லியிடம் இல்லாத பணமா? '' என்று சொல்லி ஹெல்ப் பண்ண மறுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் செய்வதறியாமல் திகைத்த வாசன், தற்போது பாஜகவின் தேசிய தலைமையை அணுகியுள்ளாராம்.
பாஜக என்ன சொல்கிறது?
இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்த போது, ''தேர்தல் செலவுகளுக்கான நிதி இன்னும் எங்களுக்கு விடுவிக்கப்படவில்லை. விரைவில் வந்து சேரும். நேரடி பாஜக வேட்பாளர்களுக்கும் தாமரையில் நிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து பணம் தரப்படும். ஆனா, கூட்டணி கட்சிகளுக்கு சேர வேண்டிய தொகையை அக்கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லை. அவர்களுக்கான செலவுகளையும் எங்களிடமே ஒப்படைத்து கவனித்துக் கொள்ளச் சொல்லப்படுமா? என்பது தெரியவில்லை. இனிதான் இன்ஸ்ட்ரக்ஷன் வரும்'' என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications