அரசு ஊழியர்களுக்கு சொளையா விடுமுறை இல்லாம போச்சே.. இன்று ஆயுத பூஜைக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள்
சென்னை: இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.. பள்ளி மாணவர்களும் விடுமுறை கொண்டாட்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.. இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.. ஆனால், 3ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பண்டிகையை முன்னிட்டு வெளியூர், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்களும் செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது..
தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு விடிகாலை முதலே கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களும் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆயுத பூஜை கொண்டாட்டம்
அதேபோல வீடுகளிலும் பூக்கள், பழங்கள், அவல் பொரி வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வரத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பே வழக்கத்தைவிட அதிகளவில் குவியத் தொடங்கிவிட்டது.. அதேபோல மேற்கண்ட பூஜை பொருட்களும் தாறுமாறான விலையில் விற்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் வார விடுமுறையும் வருவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவிற்கும் பயணப்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் வசதிக்காக, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது..
சிறப்பு பஸ்கள், ரயில்கள்
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு நேற்று முதல் 885 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு நேற்று 185 சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.., பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.. அதன்படி சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன..
தாம்பரம் டூ செங்கோட்டை
இதே போல தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விடுமுறையையொட்டி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து, இன்று ஆயுத பூஜை, விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.. இதில், அக்டோபர் 3ம்தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்..
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.. அதில், "ஒருநாள் விடுமுறை அளிக்காமல், 3ம் தேதி வேலைநாளாக இருந்தால், காலை பணிக்கு வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.
எனவே, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடும் வகையில், அக்., 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்..
அக்டோபர் 3ம் தேதியும் லீவு?
இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 3ம் தேதியும் பொது விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு பரிசீலித்தது.
அதாவது, வாரம் முழுவதும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில், விடுமுறை கிடைக்குமா?என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3ம் தேதி விடுமுறை கிடையாது என்று அரசு அறிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications