கிறங்க வைக்கும் உடலை தாண்டி.. ஈர மனசும், தங்க குணமும்.. அவர்தான் சில்க்
கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று.
சென்னை: கிறங்க வைக்கும் உடல் வனப்புமே கண்ணுக்கு மட்டும் தெரிந்தவர்களுக்கு இவரின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லைதான். அவர்தான் சில்க் ஸ்மிதா!! இன்று அவரது பிறந்தநாள்!!
விஜயலட்சுமி என்கிற சில்க் வீட்டில் யாரையுமே கேட்காமல் நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது தரித்திரம். பசியும், வறுமையும் இதற்கு பக்க துணை வேறு. என்ன செய்வது? ஆனால் வயித்துக்கு ஒன்னும் இல்லையென்றாலும் வஞ்சம் இல்லாமல் வழிந்து நிறைந்தது சில்க்கிடம் அழகு.
சின்ன வயசிலேயே கல்யாணம், அவஸ்தை, வறுமை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு நோக்கிதான் சென்னைக்கு வந்தார் விஜயலட்சுமி. யாரெல்லாம் பார்க்கிறார்களோ எல்லாருமே சொக்கி போனார்கள். எவ்வளவு விலகி ஓடினாலும் விரட்டி விரட்டியே வந்து பயமுறுத்தினார்கள்.

இவ்வளவு அழகா?
தன்னை காக்க இந்த கோடம்பாக்கத்தில் படாத பாடு பட்டுவிட்டார் சில்க். வினுசக்ரவர்த்தி தயவால், வண்டி சக்கரம் சுழல சுழல வாழ்க்கையும் வேகமாக சுழன்றது. பளபள முகம், செக்க செவேல் என நிறம் கொண்ட நடிகைகள் எல்லோருமே பொறாமை, ஆசை, ஆச்சரியம் கலந்து சில்க்கை பார்த்தார்கள். முகத்தில் எதுவுமே இல்லாத வெறுமை... முகசாயங்களே இல்லாத பொலிவுவுடன் ஒரு பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? என்று வியந்தார்கள்.

போஸ்டரில் சில்க்
ஒரு படம் என்று எடுத்து கொண்டால், ஹீரோ என்று ஒருவர் இருப்பதுபோலதான் சில்க்கும் அன்றைய காலகட்ட படங்களில் நிறைந்திருந்தார். ஒரு பாட்டுக்குத்தான் வருவார். ஆனால் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் என்றால் சில்க்கும் மறுபுறம் நம்மை பார்த்து கொண்டு இருப்பார். அந்த அளவுக்கு ஒரு ஆளுமை இருந்தது சில்க்கிடம்.

பெரிய அந்தஸ்து
அரைகுறை ஆடை, முக்கல், முனகலுடன் கவர்ச்சி நடனம் ஆடினாலும் தங்கள் வீட்டு பெண்ணாகவே சில்க்கை பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் இருந்ததை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். சில்க்கை தவிர வேறு எந்த கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத அந்தஸ்து இது!! "நடிக்க வராட்டி என்னவா ஆகியிருப்பீங்க" என்று கேட்டதற்கு, "நக்சலைட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார் முதலாளிகளின் கொடுமைகளை ஆந்திராவில் அனுபவித்த சில்க். உடல் வனப்பையும் தாண்டி கவர்ச்சியை கண்களிலேயே இழைய விட்டவர் சில்க்.

ஆங்காரம் பிடித்தவள்
சதைப்பிண்டமாகவே மக்கள் முன் உலவிய சில்க் ஒரு தங்கமான மனசுக்கு சொந்தக்காரி. ஆனால் தன்னை காப்பாற்றிக் கொள்ள கோபக்காரியாக காட்டி கொள்ள வேண்டி வந்தது. நெருங்க முடியாமல் தவித்தவர்கள் ஆங்காரம் பிடித்தவள் என பெயர் வைத்தனர். ஏகப்பட்ட வலிகளுடன்தான் இவரது பயணம் தொடங்கியது.

உயிரற்ற சவம்
இறுதியில், தென்னிந்தியாவே அவர் இறந்த நாள் அன்று, அதிர்ச்சியுற்றது. எல்லார் வாயிலும் வந்த முதலும், கடைசியுமான கேள்வி, "ஏன்.. என்னாச்சு... நல்லாதானே இருந்தாங்க?" என்று வார்த்தைகள்தான். சென்னையில் மருத்துவமனையில் உயிரற்ற சவமாக சில்க் கிடந்ததை பார்க்க யாருக்குமே மனசில்லைதான். அவரது உடலுக்கு திரையுலகம் ஏனோ அன்று சரியாக மரியாதை செலுத்தக்கூட வரமுடியாமல் போய்விட்டது.

அற்புதமான ஆன்மா
ஆனால், ஆந்திரத்திலிருந்து கரையை கடந்து தமிழகம் வந்த இந்த கவர்ச்சி புயல் என்னைக்கும் தமிழகத்தில்தான் இருக்கும்.. ஒருபோதும் கரையை கடக்க நம் மக்கள் விடவே மாட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனம்!! பாலுமகேந்திரா ஒருமுறை சொன்ன இந்த வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது... "ஒரு பேரழகிங்கிறதை தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்?"












Click it and Unblock the Notifications