தங்கம், நிலம், பங்குச்சந்தை: 2026-ல் பணத்தை பன்மடங்கு பெருக்க எது பெஸ்ட்? எதில் அதிக லாபம்?
சென்னை: சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கும் பணம் காலப்போக்கில் விலைவாசி உயர்வை விட அதிகமாக வளர வேண்டும். அதற்கு முதலீடு அவசியம். இன்று சாமானிய மக்கள் முன்னால் இருக்கும் முக்கியமான 3 வாய்ப்புகள் தங்கம், நிலம் மற்றும் பங்குச்சந்தை என்றே சொல்லலாம். இதில் எதில் பணத்தைப் போட்டால் பாதுகாப்பு, எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
முதலில் தங்கத்தை பார்த்தால், நம்முடைய இந்திய குடும்பங்களில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு அவசர கால நண்பன் என்றுதான் சொல்ல வேண்டும்..

தங்கம் - பிளஸ் பாயிண்ட்
தங்கத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அதன் திரவத்தன்மை.. அதாவது மிட்நைட்டில் அவசரத்துக்கு பணம் தேவைப்பட்டால் கூட தங்கத்தை அடகு வைத்தோ அல்லது விற்றோ உடனடியாக பணமாக்க முடியும். அதனால்தான் இந்த 2026-ம் ஆண்டிலும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் தொடர்கிறது.
ஆனால், இதிலும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. நீங்கள் நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என 10 முதல் 18 சதவீதம் வரை பணம் வீணாகும்., அதனால் முதலீடாக நினைப்பவர்கள் டிஜிட்டல் தங்கம் அல்லது தங்கப் பத்திரங்களை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். இது திருட்டு பயம் இல்லாத பாதுகாப்பான வழி.
நிலம் - முதலீடு, லாபம்
அடுத்தது நிலம் விஷயத்தை பார்த்தால், "நிலத்தின் மீது முதலீடு செய்தால் அது ஒருபோதும் ஏமாற்றாது" என்பது நம் முன்னோர்களின் வாக்கு ஆகம்.. மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருப்பதால் நிலத்தின் தேவை எப்போதும் இருந்து கொண்டேதான் உள்ளது.
நிலத்தில் முதலீடு செய்வதன் பெரிய லாபம் என்னவென்றால், அது பல மடங்கு விலை ஏறும் வாய்ப்பு அதிகம். ஒரு ஊரில் புறவழிச்சாலை அல்லது தொழிற்சாலை வருகிறது என்றால், அந்தப் பகுதியில் இருக்கும் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் எகிறிவிடும்..
ஆனால், இதிலும் ஒரு சேலஞ்ச் உள்ளது.. அது என்னவென்றால், நிலம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவைப்படும். மேலும், அவசரத் தேவைக்கு நிலத்தை உடனடியாக விற்க முடியாது. சரியான விலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். பட்டா, வில்லங்கச் சான்றிதழ் எனச் சட்ட ரீதியான சிக்கல்களைச் சரிபார்ப்பது சாமானிய மக்களுக்கு சற்று சவாலான காரியம்.
பங்குச்சந்தை - பெஸ்ட் சாய்ஸ்
மூன்றாவதாக பங்குச்சந்தை... பலருக்கும் பங்குச்சந்தை என்றால் சூதாட்டம் என்ற பயம் எப்போதுமே இருக்கிறது. ஆனால் முறையாக முதலீடு செய்தால் நிலத்தையும் தங்கத்தையும் விடப் பங்குச்சந்தை அதிக லாபம் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்..
நீங்கள் நேரடியாக பங்குகளை வாங்க பயமாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முறையை தேர்வு செய்யலாம். இதில் மாதம் 500 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும். இந்தியாவின் டாப் 50 நிறுவனங்களில் உங்கள் பணம் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் இது மிகப்பெரிய வளர்ச்சியைத் தரும். பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், 5 முதல் 10 ஆண்டுகள் வரை காத்திருந்தால் அது மற்ற எல்லா முதலீடுகளை விடவும் அதிக லாபத்தைக் கொடுக்கும்.
பணவீக்கம் - சிறு தொகை
சாதாரண மக்களுக்கு எது மிகச் சிறந்தது? நீங்கள் ஒரு நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் என்றால், உங்கள் முதலீட்டைப் பிரித்து வைப்பதே புத்திசாலித்தனம். அவசர தேவைக்காக கொஞ்சமாக தங்கம் வைத்திருக்கலாம். ஓரளவு பெரிய தொகை கையில் இருந்தால், எதிர்காலத்திற்காக நிலம் வாங்கலாம்.
ஆனால், பணவீக்கத்தை வென்று உங்கள் பணம் வேகமாக வளர வேண்டுமென்றால் மாதம் ஒரு சிறு தொகையைப் பங்குச்சந்தையில் (SIP முறை) முதலீடு செய்வது நல்லது என்கிறார்கள்.
அதாவது தங்கம் என்பது உடனடி உதவிக்கு, நிலம் என்பது கவுரவம் மற்றும் பாதுகாப்பிற்கு, பங்குச்சந்தை என்பது உங்கள் செல்வத்தைப் பெருக்குவதற்கு... இப்படி இந்த 3 விஷயத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் எதிர்காலம் பொருளாதார ரீதியாகப் பலமாக இருக்கும்... ஆக, முதலீடு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, உங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு கருவியாகும்..!!












Click it and Unblock the Notifications