இனி தங்கமும் கை கொடுக்காதா? புதிய விதிகளால் கையை பிசையும் குடும்பஸ்தன்கள்! இப்படி பண்றீங்களேப்பா?
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகை அடகு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அறிவித்திருந்தது. இந்த நடைமுறை 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியிருந்தாலும், தற்போதைலிருந்தே வங்கிகளும், பிராண்டட் வர்த்தகர்களும் அதிக கெடுபிடிகள் விதிப்பதாக கூறி புலம்புகின்றனர் வாடிக்கையாளர்கள். இதனால் தங்கம் கையில் இருந்தும் அதனை அவசர தேவைகளுக்காக பணமாக மாற்ற முடியவில்லை என கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் வருமான வரி தளர்வு உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இருந்தது.

அதில் வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறை வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார். தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் நகை அடகு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டதோடு மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது.
இந்த நிலையில் இந்த புதிய விதிமுறைகள் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு, கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும், அவசர அவசியத் தேவைகளுக்கும் ஏழை, எளிய மக்கள் உடனடி பண உதவி பெறுவதற்கு வங்கி நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ள நிலையில் இது பாதிப்பினை ஏற்படுத்தும் என எதிர்க் கட்சிகளும் கூறி வருகின்றன.
குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக இருந்த வங்கி நகைக்கடன் முறையை, ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக் கடினமானதாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் பழைய விதிமுறையின்படி, ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை அடகு வைத்ததற்கான வட்டியை மட்டும் செலுத்தினாலே, அதே நாளில் நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும்.
அதன் மூலம் குறைந்த செலவில் நகை ஏலம் விடப்படாமல் ஏழை எளிய மக்கள் காப்பாற்றிக் கொள்ளவும் அவ்விதிமுறை பயனுள்ளதாக இருந்தது. இதனால், தொடர்புடைய வங்கிகளுக்கு வட்டி தொகை முழுமையாகக் கிடைத்ததுடன், வட்டித்தொகை தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்து, வங்கிகளுக்கு லாபம் தருவதாகவும் அந்நடைமுறை இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறையின்படி நகைகளை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாகச் செலுத்தி மீட்டு, நகையைத் திருப்பிய மறுநாள் தான் மீண்டும் அதே நகைகளை அடகு வைத்துப் பணம் பெற முடியும்.
இதனால் கடன் வாங்கியவர்கள் முழுப் பணத்தையும் திரட்ட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் மீண்டும் கந்து வட்டி வாங்கி, மீள முடியாத கடன் சுமையில் சிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் புதிய விதிகள் மார்ச் 31ஆம் தேதி முதல் தான் அமலுக்கு வரும் என கூறப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே வங்கிகளும் வர்த்தகர்களும் புதிய நிபந்தனைகளை விதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
நம்மிடம் இருக்கும் தங்கத்தை அடகு வைத்தவுடன் சில நிமிடங்களில் பணம் கிடைத்துவிடும். அதற்கு பிறகு அதனை வங்கி கணக்குக்கு மாற்றலாம். ஆனால் தற்போது தங்கத்தை டெபாசிட் செய்ய வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. மேலும் தங்கத்தை அடகு வைக்க செல்லும் போது அந்த தங்கம் உங்களுடையதுதானா என்பதற்கான ஆதாரம் மற்றும் ரசீதும் கேட்கப்படுகிறது. பலரிடம் ரசீது இல்லாததால் தங்கத்தை அவசர தேவைக்கு கூட அடகு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் வங்கிகள் மற்றும் சில வர்த்தக நிறுவனங்கள் அடமானம் வைக்கும் போது அவர்களின் நிதி நிலை, வரவு செலவு கணக்கு மற்றும் ஆதார் பான் கார்டும் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக அடையாளத்திற்காக ஆதார் கார்டு, போட்டோ வாங்குவது வழக்கம். ஆனால் பான் கார்டு கேட்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறிய கடைகளுக்கு சென்றால் பெரிய அளவிலான தொகை கிடைக்காது என்பதோடு அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது.
இதனால் வங்கிகள் அல்லது பிராண்டட் செயின் நெட்வொர்க் அடகு கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். ஆனால் தற்போது அவர்கள் புதிய விதிமுறைகளை விதிப்பதால் அவசரத்துக்கு தங்க நகை கடன் வாங்குவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், நகைக்கான பில் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் மோசடி உள்ளிட்டவற்றை தவிர்ப்பதற்காகவே ரிசர்வ் வங்கி இந்த புதிய நடைமுறையை விதித்துள்ளது என்கின்றனர் வர்த்தகர்கள்.












Click it and Unblock the Notifications