தங்க நகை கடன்: ரிசர்வ் வங்கி விதியில் திருத்தம்! மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்! சு வெங்கடேசன் எம்பி
சென்னை: தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். முன்னதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும்" என்று நேற்று கூறியிருந்தார்.
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டது. தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும், தங்க நகைக்கடன் வாங்குவோர், நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்ற ஆதாரத்தை அளிக்க வேண்டும், தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும் உள்பட 9 விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
ஆர்.பி.ஐ கொண்டு வந்த இந்த விதிமுறைளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சாதாரண ஏழை எளிய மக்கள் அவசர தேவைகளுக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெறும் நிலையில், ரிசர்வ் வங்கியின் விதி, ஏழை மக்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விதிகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு என்று சொல்லப்பட்டது.
அரசியல் கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சககும் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை ஒன்றை அளித்தது. அதில், ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
முழுமையான விதிமுறைகள்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வு வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்;
1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.
2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.
3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்
இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தங்க நகைக்கடன் விவகாரம் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதில், நகைக்கடன் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டது நகல் விதிமுறைகள் தான். மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications