2025.. அவன்தான்டா பெரிய வேலைய பாத்துட்டு போயிட்டான்! விண்ணைத் தொட்ட தங்கம் விலை! மாற்றி யோசித்த மக்கள்
சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் தங்கம் என்ற வார்த்தையை உச்சரிப்பதே கடினமாகிவிட்டது. நகை கடைகளில் செய்கூலி, சேதாரம் என கூடுதல் விலைக்கு விற்பதால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க விரும்பினாலும் நகைகளாக வாங்காமல் தங்க நாணயங்களாக வாங்குவதாக கூறுகின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள்.
2025 தங்க மார்க்கெட்டில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். 1920 ஆம் ஆண்டுகளில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வந்தது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 57,000 ஆக இருந்த நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கும் சராசரியாக 5,000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை உயர்ந்தது.
இதன் காரணமாக ஆண்டின் இறுதியான டிசம்பரில் ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு, போர் சூழல் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கணிசமான உயரத்தை எட்டி இருக்கிறது.

தங்க விலை உயர்வு
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு 2 லட்சம் ரூபாய் என்ற அளவை கூட தொடலாம் என்கின்றனர். தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் தங்கத்தின் விற்பனை கணிசமாக சரிந்து இருப்பதாக சொல்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள். தங்கம் வாங்குவது எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கும் சொத்தாக இருக்கிறது. நிலம் உள்ளிட்டவற்றை வாங்கினால் அதனை உடனடியாக விற்று பணமாக்க முடியாது.
ஒரு சவரன் ஒரு லட்சம்
ஆனால் தங்கத்தை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உடனே விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளலாம் என்பதால் தங்கம் வாங்குவதில் நடுத்தர குடும்பத்தினர் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை தங்கம் முதலீடு என்பதை தாண்டி ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. புன்னகை இருக்க பொன்னகை எதற்கு என்று சொன்னாலும் நகை அணியாமல் ஒரு விசேஷத்துக்கு சென்றால் சக பெண்கள் அவர்களை மதிக்க கூட மாட்டார்கள்.
தங்க நகை விற்பனை சரிவு
அதே நேரத்தில் தங்க நகை கடைகளில் தற்போது விற்பனை சரிந்து வருகிறது. தங்க நகைகளாக வாங்கினால் சவரனுக்கு 5 முதல் 15 சதவீதம் வரை செய்கூலி சேதாரம் ஆகியவை விதிக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினோம் என்றால் செய்கூலி, சேதாரம் என அந்த நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டி விடும். அதே நகையை விற்கும் போதும் அதே ஒரு லட்சத்திற்கு தான் விற்க முடியும். இதனால் நகைக்கடைக்காரர்கள் கணிசமாக லாபம் பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் தற்போது தங்க நகை கடைகளில் விற்பனை சரிந்து இருக்கும் நிலையில் டிஜிட்டல் தங்கம், இடிஎப் போன்றவற்றில் மக்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
தங்க நாணயம் வாங்குதல்
ஒவ்வொரு நாடும் தங்களுடைய பொருளாதாரத்தை நிலையாக வைக்க வேண்டி தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். மேலும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் கூட நகைகள் வாங்குவதை குறைத்து விட்டார்கள். திருமணம் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தற்போது நகைகள் வாங்கப்படும் நிலையில், முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்க நாணயங்களாகவும், தங்க கட்டிகளாகவும் வாங்கி வருகின்றனர். இதனால் தங்க விற்பனை சரிந்துள்ளது என்கின்றனர் உரிமையாளர்கள்.












Click it and Unblock the Notifications