ஜூலை 25 to அக்டோபர் 30.. தங்கம் விலையில் ஏற்பட்ட வரலாறு காணாத மாற்றத்தின் பின்னணி
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தையும் நேற்று தொட்ட நிலையில், இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. வெறும் 35 நாட்களில் 3500 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேநேரம் கடந்த ஜூலை 25ம் தேதி தங்கம் விலை 51,440க்கு விற்பனையான நிலையில், அக்டோபர் 30ம் தேதியான இன்று 59520க்கு விற்கிறது. தங்கம் விலை இந்த அளவிற்கு உயர்ந்தன் பின்னணி பற்றி பார்ப்போம்.
தங்கம் விலை 2023ம் ஆண்டை ஒப்பிடும் 2024ம் ஆண்டிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னர் அப்படியே நீடித்து வந்த நிலையில், மெல்ல மெல்ல அதிகரித்து மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையை அடைந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக தங்கம் விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. மேலும் விலை குறையும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த வேகத்தில் விலை குறைந்ததோ, அதைவிட அசூர வேகத்தில் விலை உயர தொடங்கியது. தங்கம் விலை ஜூலை 25ம் தேதி அன்று 22 கேரட் 51,440க்கு விற்பனையானது. ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில், அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது.
அதன் பின்னரும் விலை மாறி மாறி வந்தது. இதனிடையே இஸ்ரேல் ஈரான் நாடுகளில் போர் அபாயம், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற காரணங்களால் தங்கம் விலையில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதற்கு பிறகும் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த அக்டோபர் 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாகவும் தங்கம் விலை உயருவதும், குறைவதுமாக நீடித்து வந்தது, இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 315-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 520-க் கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 375-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை ஒரு பவுனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 59520 ஆக விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 7440க்கு சென்னையில் விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 35நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.440-ம், பவுனுக்கு ரூ.3520 அதிகரித்துள்ளது . தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலை உயர்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் விலை சரிவு, இஸ்ரேல் ஈரான் போர் அச்சம் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தங்கம் விலை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு லட்சத்தை தாண்ட வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications