தவிக்க வைக்கப் போகும் தங்கம் விலை! நிபுணர்கள் கொடுத்த வார்னிங்
சென்னை: 'தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்' என்ற வார்த்தை அன்றாடம் சாதாரண செய்தியாகி விட்ட நிலையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்குமா? தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற நிலையை எட்டலாம் எனவும், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 250 ரூபாய் என்ற அளவுக்கு வரலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இந்தியர்களின் அன்றாட வாழ்விலும், பாரம்பரியத்திலும் அங்கமாய் இருக்கும் தங்கம், கடந்த சில மாதங்களாக 'விலை உயர்வு' என்ற வார்த்தையோடு தான் செய்திகள் பக்கங்களில் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் "வரலாறு காணாத உயர்வு" எனக் குறிப்பிடப்பட்ட விலை இன்று தினசரி நிலவரமாய் மாறியுள்ளது.
2025 ஜனவரி 1 அன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கு விற்பனையானது. ஆனால் இப்போது, நேற்றைய நிலவரப்படி, அதே தங்கம் ஒரு கிராம் ரூ.10,240-க்கு, ஒரு பவுன் ரூ.81,920-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை
இதேபோல வெள்ளியும் தொடர்ந்து உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.142-க்கும், ஒரு கிலோ பார் ரூ.1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து தங்கம் வாங்கலாமா? அல்லது காத்திருக்கலாமா? என மக்கள் யோசித்து வருகின்றனர். உலகப் பொருளாதாரம், சர்வதேச அரசியல் நிலவரங்கள், போர் சூழ்நிலைகள், அமெரிக்க டாலர் மதிப்பு போன்ற காரணிகளால் தான் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது இஸ்ரேல்-காசா போர், ரஷ்யா-உக்ரைன் மோதல், அமெரிக்கா-சீனா வர்த்தகத் தகராறு, ட்ரம்ப் கொண்டு வந்த புதிய இறக்குமதி வரிகள், இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் ஆகியவை தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் விலை தினந்தோறும் ஏறிக்கொண்டே செல்கிறது என்கின்றனர் வியாபாரிகள்.
தங்கம் விலை உயர்வு
தங்க விலை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு பவுன் ரூ.1 லட்சம் என்ற விலையை எட்டக் கூடும் என்றும், வெள்ளி ஒரு கிராம் ரூ.250 வரை செல்லும் வாய்ப்பு உள்ளதென நிபுணர்கள் கணிக்கின்றனர். தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதில் ஐயமில்லை. "அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் நிச்சயம் லாபகரமாக இருக்கும். குறிப்பாக, ஒரு நடுத்தர குடும்பம் குறைந்தது 25 பவுன் தங்கம் வைத்திருக்க வேண்டும்" என்கின்றனர் வியாபாரிகள்.
தங்கம் சேமிப்பு
ஆனால், தங்க விலை உயர்வால் வியாபாரிகள் சிக்கலில் சிக்கியுள்ளனர். அதிக முதலீடு செய்து தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. அதே சமயம், வாடிக்கையாளர்கள் அளவு குறைத்தாலும், தங்கம் வாங்கும் பழக்கம் குறையவில்லை. தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியும் நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. ஆபரணங்கள் மட்டுமின்றி தொழிற்துறைகளிலும் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுவதால், அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. வெள்ளி ETF வழியாகவும் முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தங்கம் விலை குறையுமா?
சுப நிகழ்ச்சிகளுக்கும், சேமிப்புக்கும் இந்தியர்கள் தங்கத்தை வாங்கும் பழக்கம் ஒருபோதும் குறையாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விலை விண்ணைத் தொட்டிருக்கும் சூழலில், சாதாரண மக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி வருகிறது. வருங்காலத்தில் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரமாகினாலும், தங்கம் விலை திடீரென குறையும் வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிபுணர்கள் கூறுவதுபோல், தங்கம் விலை திடீரென குறையும் வாய்ப்பு இல்லை. எனவே, முதலீடு செய்ய விரும்புபவர்கள் நிபுணர்களின் ஆலோசனை பெற்று, அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது நல்லது என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications