வரலாறு காணாத உச்சம் பெற்ற தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 4,094 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து பெற்றோரின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. ஆடி மாதம் முடிந்து திருமணங்கள் நடத்தும் நிலையில் இது போல் விலையேற்றம் மக்களை வாட்டி வதைக்கிறது.

கொரோனா காலத்தில் திருமணம் செய்தால் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளதால் மண்டபச் செலவுகள் மிச்சமாகும். பேண்ட் வாத்தியம், பெண் அழைப்பு உள்ளிட்ட கைகளை கடிக்கும் செலவுகள் இல்லை.
மேலும் சாதாரணமாக ஒரு திருமணம் என்றாலே அப்படி இப்படி என குறைந்தது 250 பேர் ஆஜராவர். இவர்களில் வெளியூரில் இருந்து வந்தால் அவர்கள் தங்குவதற்கான அறை வாடகை, பியூட்டி பார்லர் உள்ளிட்ட செலவுகளும் மிச்சமாகும்.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மற்ற செலவுகளை விட தங்கம் வாங்குவதே இரட்டிப்பு மடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று கிராம் ஒன்றுக்கு 4,885 ரூபாய்க்கு விற்ற தங்கம், இன்று ரூ 19 அதிகரித்து 4,904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதாவது சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து 39, 232 ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகிறது. திங்கட்கிழமை தொடங்கி கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,608 ரூபாய் உயர்ந்துள்ளது. அது போல் வெள்ளி விலையும் கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 66.90 காசாக உள்ளது.
இதனால் திருமணத்தை வைத்துவிட்டு இவ்வளவு பவுன் போடுகிறோம், அவ்வளவு போடுகிறோம் என வாக்குறுதிகளை கொடுத்தவர்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது.












Click it and Unblock the Notifications