4 நாள் நல்லாதானே போச்சு? தங்கம் விலை இன்று திடீர் உயர்வு! நகைக் கடைகள் வெறிச்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ 400 உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். மீண்டும் தங்கத்தின் விலை உச்சாணிக்கு சென்று விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் அன்றைய தினமே தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் 4ஆவது நாளாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 குறைந்து சவரன் ரூ 51,320 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து ரூ 6415 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ 89 க்கு விற்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3,160 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதினர். கடந்த ஜூலை 17 ஆம் தேதி சவரன் விலை ரூ 55,360 க்கு விற்பனையானது. அதன் பிறகு ஜூலை 22 ஆம் தேதி சவரன் ரூ 54,600 க்கு விற்பனையானது.
கடந்த செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதாவது சுங்க வரி குறைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 24ஆம் தேதி கிராமுக்கு ரூ 275 குறைந்து ஒரு கிராம் ரூ 6,550 க்கு சவரனுக்கு ரூ 2200 குறைந்து சவரன் விலை ரூ 52,400க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நேற்று முன் தினம் 3ஆவது நாளாக கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ 6,430 க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ 480 குறைந்து ஒரு சவரன் விலை ரூ 51440 க்கு விற்பனையானது. தங்கம் விலை குறைந்ததை அடுத்து வெள்ளி விலையும் ரூ 3 குறைந்து கடந்த 5 தினங்களாக கிராம் ரூ 89 க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் வரும் நாட்களிலும் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிந்தது. பொதுவாக ஆடி மாதம் எந்த திருமணங்கள் பெரும்பாலும் இல்லாததால் நகையின் விலை குறைந்து வரும். தற்போது இறக்குமதி வரியும் குறைந்துள்ளதால் நாளை தங்கம் சவரன் ரூ 50 ஆயிரத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்துவிட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 51,720 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,465 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 89 என மாற்றமில்லாமல் உள்ளது.












Click it and Unblock the Notifications