ஒரே நாளில் 2 முறை எகிறிய தங்கம் விலை.. 3 மாதத்தில் 10,000 அதிகம்.. நகை விற்பனையாளர்கள் சொல்வது என்ன?
சென்னை: தங்கம் விலை ரம்ஜான் பண்டிகை நாளான நேற்று (மார்ச் 31) 2 முறை விலை உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதற்கு என்ன காரணம் என தங்க வியாபாரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அண்மைக்காலமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி வருகிறது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 57 ஆயிரம் என்ற அளவில் இருந்த ஒரு சவரன் தங்கம் விலை தற்போது 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ரம்ஜான் நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் நேற்று ரம்ஜான் பண்டிகை நாளில் (மார்ச் 31) காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.67,400-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் தங்கம் ரூ.72,952-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக இருந்தது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. காலையில் ரூ.520 மாலையில் ரூ. 200 என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. இதன்மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.67,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.8450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3 மாதங்களில் 10 ஆயிரம் அதிகம்
கடந்த 3 மாதங்களில் ஒரு சவரன் தங்கம் விலை சுமார் ரூபாய் 10 ஆயிரம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வருவது சாமானிய மக்களையும், நகைப் பிரியர்களையும் பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,150 ஆக இருந்தது. ஒரு சவரன் ரூ. 57,200ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.67 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதாவது 3 மாதங்களில் ரூ.10,000 அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்க நகை விற்பனையாளர் கருத்து
தங்கம் விலை மேலும் உயரும் என நாம் எதிர்பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் திடீர் முடிவுகள் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்தியா - சீனா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும் புதின் மீது தான் கோபமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஈரானும் சில நாட்களாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் எனக் கூறி வருகிறது. இதனால் ரஷ்யா, சீனா மற்றும் அதன் நட்பு நாடுகள், அமெரிக்க டாலர்கள் மூலம் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
இன்னும் விலை உயரக்கூடுமாம்
எனவே அமெரிக்க டாலர்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்து, டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. உலக அளவில் ஏற்படும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக, முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவு உயர உள்ளது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications