“அயன்” சூர்யா நினைவிருக்கா? உலகின் “காஸ்ட்லி” மாப் இதுதான்.. அதிர்ந்த சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்
சென்னை: விமான நிலையத்தில் தூய்மை பணியாளர் வைத்திருந்த மாப் கைப்பிடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.78 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கப்பசையை,மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள், பயணிகள் வருகை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனா்.
அப்போது அதில் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் சற்று வித்தியாசமாக இருந்துள்ளது. இதனை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தங்க பசை
இதனை அடுத்து அந்த பாதுகாப்பு படை வீரர் ஒப்பந்த ஊழியர் அருகே சென்று மாப்பை கழற்றி காட்டும்படி கூறி உள்ளார். அந்த தூய்மை பணியாளரும் மாப்பை கழட்டி காட்டும் போது, அதன் கைப்பிடி குழாய் உள்ளே இருந்து தங்க பசை அடைத்த 10 பாக்கெட்கள் மளமளவென வெளியே வந்து விழுந்தன.

ரூ.78 லட்சம் மதிப்பு தங்கம்
இதனை கண்டு அதிா்ச்சியடைந்த தொழில் பாதுகாப்பு படை வீரா், 10 பாக்கெட்களையும் பிரித்து ஆய்வு செய்தாா். அப்போது பாக்கெட்களில் மொத்தம் 1.811 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.78 லட்சம் என கணக்கிடப்பட்டு உள்ளது.. இதனை கைப்பற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் மாப்பையும் தூய்மை பணியாளரை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.

தீவிர விசாரணை
அந்த பணியாளரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனா். சுங்க அதிகாரிகள் இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். விமான நிலைய ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப்பிற்குள் ரூ.78 லட்சம் மதிப்புடைய தங்கம் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

கடத்தல் தங்கம்
வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்த தங்கத்தை கடத்தல் ஆசாமிகள் விமானநிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து அவா் மாப்பிற்குள் மறைத்து வைத்து வெளியே கொண்டு செல்ல முயன்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications