இளையராஜா கேட்ட ரூ 5 கோடி! யாரிடம் உரிமை இருக்கிறதோ அவரிடம் வாங்கிவிட்டோம்! GBU தயாரிப்பாளர் பதிலடி
சென்னை: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம் என்றும் படத்தின் தயாரிப்பாளர் பதில் கொடுத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், யோகிபாபு, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியானதிலிருந்தே இரு வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
ரூ 150 கோடி வசூல்
எனினும் ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். இந்த படத்திற்கு ரூ 150 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இளையராஜா இசையமைத்த நாட்டுப்புற பாட்டு எனும் படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பாடலும் விக்ரம் படத்தில் என் ஜோடி மஞ்சக்குருவி பாடலும், சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ உள்ளிட்ட ரெட்ரோ பாடல்கள் குட் பேட் அக்லியில் இடம்பெற்றுள்ளன.
3 பாடல்கள் பயன்பாடு
இந்த நிலையில்தான் தனது அனுமதியில்லாமல் 3 பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளதாக படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இழப்பீடாக ரூ 5 கோடியும் கேட்டுள்ளார்.
ரூ 5 கோடி கேட்டு நஷ்ட ஈடு
இதுகுறித்து இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் அனுப்பிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது: தனது பாடலை பயன்படுத்தியதற்காக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்க வேண்டும். 7 நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
மறுஉருவாக்கம்
மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்திய அந்த பாடலை நீக்க வேண்டும். தான் இசையமைத்த பாடல்களை தடுக்கும் விதமாக மறுஉருவாக்க பாடல்கள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் பேட்டி
இதுகுறித்து வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், சட்டப்படி இசையமைத்தவர்தான் பாடலுக்கு உரிமை கோர முடியும். அவர் அவருக்காக மட்டுமல்ல, பின்னால் வரும் இளைய சந்ததி இசையமைப்பாளர்களுக்கும் சேர்த்தே பேசுகிறார், போராடுகிறார். அவர் அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது தவறு. அதிலும் அவரது பாடல்களை மறுஉருவாக்கம் செய்து அதன் ஒரிஜினாலிட்டியை அழித்தது மிகவும் தவறு என கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் சொல்லும் விளக்கத்தை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர் ரவிசங்கர் பதில்
இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸின் ரவிசங்கர் பதில் கொடுத்துள்ளார்.
விதிகளின்படிதான்
அதில் அவர் கூறியிருப்பதாவது: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.
அனுமதி வாங்கியாச்சு
அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. எனவே நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இளையராஜா ஏற்கெனவே மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியிருந்ததற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கூலி டீசர்
அது போல் கூலி டீசரில் ரஜினி நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வாவா பக்கம் வா பாடலின் டிஸ்கோ இசை பயன்படுத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications