டிராஃபிக்கிற்கு குட் பை! வட சென்னை மக்கள் ஹேப்பி... மும்பை போல் சென்னையில் நீளமான கடல் பாலம்
சென்னை: சென்னையில் இரண்டு துறைமுகங்களை இணைக்கும் வகையில் விரைவில் கடல்வழி பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது.
சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியை அதிகரிக்கவும் வருவாயை உயர்த்தவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகவே 10 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டு ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் மேம்பால திட்டம், இரட்டை அடுக்கு மேம்பால திட்டமாக மாற்றப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சென்னையின் முக்கிய துறைமுகங்கள்
சென்னை மண்ணடி அருகே உள்ள துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய வங்கக்கடல் மார்க்கத்தில் அமைந்துள்ள மிக மிக்கிய துறைமுகங்களான இவ்விருண்டுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்து ராயபுரம், திருவொற்றியூர், மணலி வழியாக உள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சரக்குகள் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

7.6 கி.மீ. தூர கடற்பாலம்
இதனை தவிர்க்க சென்னை துறைமுகம் - மணலி இடையே 7.6 கி.மீ. தொலைவுக்கு கடல் வழி பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதனால் இரு துறைமுகங்களுக்கு இடையே சாலை மார்க்கமாக சரக்குகளை கொண்டு சேல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் காலதாமதம் போன்றவை தவிர்க்கப்படும். குறைவான நேரத்தில் அதிகளவிலான பொருட்களை இரு துறைமுகங்களுக்கு இடையே கொண்டு செல்ல முடியும்.

மும்பை போல் சென்னையில் கடற்பாலம்
மும்பை பாந்திராவிலிருந்து வொர்லி வரை அமைக்கப்பட்டு உள்ள கடற்பாலத்தை போல் துறைமுகத்திலிருந்து மணலி - திருவொற்றியூர் சந்திப்பு இடையே இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சமர்பித்து இருக்கிறது. அடுத்த மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திட்டம் குறித்து சில தகவல்
7.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த கடற்வழி பாலத்தில் தடுப்புடன் கூடிய 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் தொடங்கும் இந்த பாலம் எர்ணாவூர் வரை நீள்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இந்த திட்டம் ஆர்வி கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. துறைமுகங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்து இடையூறு இன்றி இயங்குவதே இதன் நோக்கம்.

வட சென்னை மக்களுக்கு ஆறுதல்
சென்னை வட சென்னையில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இந்த 2 துறைமுகங்களுக்கு இடையே செல்லும் சரக்கு வாகனங்களே. இதனால் வட சென்னையின் முக்கிய சாலைகள் எல்லா நேரங்களிலும் வாகன நெரிசலுடன் காணப்பட்டு வருகின்றன. அத்துடன் சுற்றுச்சூழல் மாசும் அதிகம் உள்ளது. இதனிடையே இந்த சரக்கு வாகனங்கள் புதிதாக அமைக்கப்படும் கடற்வழிப் பாலத்தில் சென்றால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications