பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்
சென்னை: கோவை, சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிலவி வந்த நீண்டகால சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு "முதல்வரின் முன்னெடுப்பு திட்டம்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்கள் மீது ஆய்வுப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.. அதுகுறித்த குட் நியூஸ் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது..
கடந்த காலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தியது.. ஆனால், அப்படி நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது தெரியாமல், பல பொதுமக்கள் அந்த இடங்களில் மனைகளை வாங்கி, தங்களின் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு வீடுகளைக் கட்டி குடியேறினார்கள்..

நில எடுப்பு பிரச்சனை
நில எடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு ஏற்பட்ட இந்த சிக்கல்களால், அம்மக்களுக்கு பட்டா பெறுவதிலும், தடையின்மை சான்று பெறுவதிலும், பெயர்களை மாற்றம் செய்வதிலும் நீண்டகாலமாக பல சட்ட போராட்டங்களும் நிர்வாக சிக்கல்களும் நீடித்து வந்தன..
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் குமுறல்களை முதலமைச்சரிடமும், வீட்டுவசதித் துறை அமைச்சரிடமும் முறையிட்டனர்.. இதன் எதிரொலியாகவே, இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதலமைச்சர் உத்தரவிட்டார்..
பட்டா - தமிழக அரசு
இதன்படி, கடந்த ஜனவரி 23, 2025 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 10-ன் படி, உயர்மட்ட அளவிலான இரு நபர் குழு அமைக்கப்பட்டது.. இந்தக் குழு நில எடுப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ள பகுதிகளை தனித்தனியாக ஆய்வு செய்து வருகிறது..
ஏற்கனவே சிறப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் 4396 ஏக்கர் நிலங்கள் வீட்டுவசதி வாரியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, உரிய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.. இப்போது எஞ்சியுள்ள 5952 மனுதாரர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது..
இரு நபர் குழு
இந்த இரு நபர் குழு, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை, அந்த நிலங்களில் வீடு கட்டி வசிப்பவர்களின் விவரங்கள் மற்றும் வருவாய்த் துறை ஆவணங்களை மிக நுட்பமாக ஒப்பிட்டுப் பார்த்து வருகிறது.. நில எடுப்பு நடவடிக்கை தெரியாமல் நிலம் வாங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சட்டப்பூர்வமாகப் பட்டா வழங்குவதற்கான பரிந்துரைகளை இந்தக் குழு விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது..
இதன் மூலம் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த நில உரிமைச் சிக்கல்கள் முடிவுக்கு வந்து, பொதுமக்களின் நீண்ட கால பட்டா கனவு விரைவில் நனவாகும் என அரசு வட்டாரங்கள் உறுதி அளித்துள்ளன..
கோவை, சென்னை குட் நியூஸ்
இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் நிலப் பிரச்சனையில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளன..!!
குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் காளப்பட்டி, வெள்ளக்கிணறு, கணபதி, விளாங்குறிச்சி போன்ற முக்கிய பகுதிகளிலும், சென்னை மாவட்டத்தின் கே.கே. நகர், இராமாபுரம் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு இந்தப் புதிய அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது..
மொத்தத்தில் தமிழக அரசின் இந்த விவேகமான நடவடிக்கை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு பெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications