6 கோடி EPFO உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு.. ஊழியர்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ் கொடுத்த மத்திய அரசு!
சென்னை: நாடு முழுவதும் உள்ள EPFO உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்திருக்கிறது மத்திய அரசு. நீங்கள் PF திட்டத்தில் உள்ள 6 கோடி உறுப்பினர்களில் ஒருவர் என்றால் இந்தச் செய்தி உங்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுப் பலன்கள் (Insurance) நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 7 லட்சம் வரை ஊழியர்களின் குடும்பத்தினர் பெற முடியும்.

பி.எஃப் கணக்கு: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பி.எஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது.
ஊழியர்கள், பி.எஃப் திட்டத்தில் பங்களிக்கும் தொகை முழுவதும் EPF கணக்கிற்கு செல்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 3.67 சதவீதம் EPF கணக்கிற்குச் செல்கிறது. மீதமுள்ள, 8.33 சதவீதம், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) வரவு வைக்கப்படுகிறது.
EDLI காப்பீடு: EDLI எனப்படுவது, EPFO உறுப்பினர்களுக்கான காப்பீட்டு திட்டம் ஆகும். இது 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் EPFO உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பலன்களை வழங்குவது. இதன் மூலம் ஒரு EPFO உறுப்பினர் இறக்கும்போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவு நிதியைப் பெற முடியும். இதற்கு தனியாக ஊழியர்கள் பணம் செலுத்த தேவையில்லை. EPFO-வில் இணைந்த அணைவருக்குமே இது பொருந்தும்.
EDLI திட்டத்தின் விதிகளின்படி, ஏப்ரல் 2021 வரை ஊழியர்கள் இறந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அதிகபட்சமாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. DLI திட்டத்தில், காப்பீட்டு பலன்கள் வழங்கப்படுவது 27 ஏப்ரல் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்ச பலன் 2.5 லட்சமாகவும், அதிகபட்ச பலன் 7 லட்ச ரூபாயாகவும் மாற்றப்பட்டது.
நிபந்தனை தளர்வு: ஒரு நிறுவனத்தில் 12 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றினால் தான், இந்த EDLI திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்ற நிபந்தனை முன்பு இருந்தது. இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டதால், மேலும் அதிகமான ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். அதாவது, 12 மாதங்களுக்கு குறைவாக ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்திருந்தாலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் காப்பீடு கிடைக்கும். இந்த திருத்தப்பட்ட பலன்கள் ஏப்ரல் 27,2024 வரை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 7 லட்சம் வரை: எனவே, இ.பி.எஃப்.ஓவுக்கு பங்களித்துக் கொண்டிருக்கும்போதே ஊழியர்கள் மரணம் அடைந்தால், பதிவு செய்யப்பட்ட நாமினி மொத்தத் தொகையைப் பெறுவார். நாமினி பதிவு செய்யவில்லை என்றால், அந்தத் தொகை சட்டப்பூர்வ வாரிசுக்கு கிடைக்கும். ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும்.
30 நாட்கள் * கடந்த 12 மாதங்களில் பணியாளரின் சராசரி மாதாந்திர சம்பளம் (ரூ. 15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது). மேலும் கூடுதல் போனஸ் ரூ. 2,50,000 வரை வழங்கப்படும். மொத்தம் = ரூ 4,50,000 (15,000 * 30 நாட்கள்) + ரூ. 2,50,000 (போனஸ்) = ரூ. 7,00,000. EDLI இன் கீழ் அதிகபட்சமாக ரூ. 7,00,000 வரை வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications