ஹைடெக் வசதி.. செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்படி மாறப்போகுது பாருங்க.. பயணிகளுக்கு ரயில்வே அப்டேட்
சென்னை: ஆயிரக்கணக்கான பயணிகள் கையாளும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹைடெக் வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ள நிலையில், பணிகள் எந்த அளவு முடிந்துள்ளன.. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்னைக்கு வெளியே உள்ள மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் பெரும்பாலும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்றே செல்கின்றன.

செங்கல்பட்டு ரயில் நிலையம்: செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் ஏறி செல்கிறார்கள். அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை நகருக்கு புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்குள் வரும் புறநகர் பகுதி மக்களுக்கு இந்த ரயில் நிலையமே முக்கிய சந்திப்பாக உள்ளது. இதனால், பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும் ரயில் நிலையங்களில் ஒன்றாக செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.
மேம்பாட்டு பணி: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தற்போது, டிக்கெட் கவுண்ட்டர், முன்பதிவு மையம் என தனியாக உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை கையாளும் இந்த ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏசி ஓய்வு அறைகள்: இந்த கட்டிடத்தில் பயணிகள் தங்குவதற்கு மூன்று ஒய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கான ஓய்வு அறையில் ஏசி வசதி செய்யப்படுகிறது. அதி நவீன தொழில் நுட்பத்துடன் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், லிப்ட், எஸ்கலேட்டர் ஆகியவை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ரயில் நிலைய கட்டுமான பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது தொடர்பான அப்டேட்டை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
60 சதவீத பணி நிறைவு: இதனபடி, தற்போது டிக்கெட் கவுண்ட்டர், லிப்ட் பணிகள், புக்கிங் அலுவலகம் & பயணிகள் செல்லும் வழி, சுற்று பகுதி ஆகியவை கட்டும் பணிகள் முழு வீச்சில் நடப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது. பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளதால் அக்டோபர் 31க்குள் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் எதிர்பார்ப்பு: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் நிலையில் விரைவாக கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
90 ரயில் நிலையங்கள்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சில ரயில் நிலையங்களை அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் எத்தனை?: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு நிகராக மறுகட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல சென்னை பூங்கா, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் செயிண்ட் தாமஸ் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்தது. அதன்படி, இந்த ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications