40 ஆண்டு கனவு.. 33 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்.. சென்னை உள்பட பல பகுதிகளில் குடியிருப்போருக்கு குட்நியூஸ்
சென்னை: வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக கையகப்படுத்தி, பயன்படுத்தப்படாமல் உள்ள சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு, விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலங்கள் எல்லாம் நில உரிமையாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. சுமார் 40 ஆண்டுகளாக பிரச்சனையில் இருந்து வந்தது. இந்நிலையில் நிலங்கள் திரும்ப கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது,"தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சில திட்டங்களுக்காக பலருக்கு வீட்டுவசதி வாரியத்தால் நிலம் எடுப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த நிலத்தை எடுக்கவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

எனினும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். அந்த நோட்டீஸ் இருப்பதால் அந்த நிலம் குறித்து எந்த முடிவையும் நில உரிமையாளர்களாலும் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து கடந்த 40 ஆண்டுகளாக இந்த நோட்டீஸ் பிரச்சினை நீடித்து வந்தது. அதுபோலவே 6டி டிராப்ட் அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்திலும் இதுபோன்ற பிரச்சினை இருந்து வருகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்படியான சிக்கலில் இருக்கிறது. நில உரிமையாளர்களால் அந்த நிலங்களை பயன்படுத்த முடியவில்லை. எனினும் அந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. வாங்கியவர்களும் முறையாக பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள்..
எனவேதான் இந்த பிரச்சினைக்குதீர்வு காண 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு 4,488 மனுக்கள் பெறப்பட்டு அவற்றை பரிசீலிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மனுக்கள் 6 வகையாக பிரிக்கப்பட்டன. இதில் முதல் வகை 4 (1) நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டது. அவற்றை ஒன்றிணைத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், சில வகை நிலங்களை பலர் விற்றுவிட்டார்கள். அதில் வீடுகளும் கட்டப்பட்டு உள்ளன. அந்த வகையில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் வருகிறது. இனி அந்த நிலங்களில் இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். கூறியுள்ளோம். அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட உள்ளது. தற்போது 4 (1) நோட்டீஸ் வழங்கப்பட்ட 2002.21 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அவற்றில் நில உரிமையாளர்களுக்கு எந்த செலவும் இல்லை.. மீதமுள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலம் வழக்கிலும், ஆவணங்கள் சரியாக இல்லாத நிலம் ஆய்விலும் இருக்கிறத. அந்த நிலமும் திரும்பி வழங்கப்பட்டுவிடும். அந்த வகையில் இதுவரை 12 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டிருக்கிறது
நில ஆர்ஜித நடவடிக்கைகளுக்குப் பிறகு உரிமையாளர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பெறாததால், அந்தத் தொகை கோர்ட்டில் கட்டப்பட்டோ அல்லது வருவாய் வைப்பீடாகவோ உள்ளது. ஆனாலும் அந்த நிலத்தை வாரியம் எடுக்காத சூழ்நிலையில் பலர் அந்த இடங்களில் வீடுகளைக் கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளார்கள்.
அந்த இடங்களை அரசு எடுத்தால் வீடுகளை இடிக்க வேண்டியதிருக்கும். எனவே, அந்த இடங்களுக்கு என்ன விலையை வாரியம் கொடுத்ததோ, அதை நில மேம்பாட்டுத் தொகையுடன் கணக்கிட்டு, நிதித்துறையுடன் விவாதிக்கப்படும். நிலத்தில் இருப்பவர்கள் என்ன தொகை செலுத்த வேண்டுமோ அதை செலுத்தி அந்த இடத்தை அவர்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உரிமையாளர்கள் என்பதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும்.
வீட்டுவசதி வாரியத்தால் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான இடம் மட்டுமே மேம்படுத்தப்பட்டது. பராமரிக்கப்படாத நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. என்றாலும், அந்த நிலம் முழுமையாக வீட்டுவசதி வாரியத்துக்குத்தான் சொந்தம். இருந்தாலும், அதில் ஏற்கனவே கட்டிடம் கட்டியிருந்தால், அதற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் உரிமையாளர்களுக்கு சில திட்டங்கள் மூலம், வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படாமல் தர முடிவு செய்யப்பட்டிருக்கிறத அந்த வகையில் 18 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் விடுவிக்கப்படும்" என அமைச்சர் முத்துசாமி பேட்டியின் போது தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications