அடுக்குமாடி வீடு வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்! ஒரே பத்திரம், ஒரே கட்டணம்! முத்திரை வரியில் ரிலீஃப்
சென்னை: அடுக்குமாடி வீடுகளை வாங்குவோர், 2023 நவம்பர் 30க்குள் கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்தவர்கள், அதற்கான செலவை கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யும்போது ஈடு செய்து கொள்ளலாம் என்று தமிழக பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன? இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
அடுக்குமாடி வீடுகளில் கூட்டு மதிப்பு என்பது, ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிடைக்கும் கூடுதல் வசதிகளால் உருவாகும் மதிப்பை குறிப்பதாகும்...

வீடு மட்டும் அல்லாமல், அதனுடன் சேர்ந்து வழங்கப்படும் வசதிகளே கூட்டு மதிப்பாக பார்க்கப்படுகின்றன. அதாவது லிஃப்ட், பாதுகாப்பு, பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் இதில் அடங்கும். பூங்கா, குழந்தைகள் பூங்கா, ஜிம் போன்ற வசதிகள் இந்த மதிப்பை மேலும் உயர்த்துகின்றன. ஜெனரேட்டர், மழைநீர் சேகரிப்பு போன்ற அமைப்புகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கூட்டு மதிப்பு - அப்பார்ட்மெண்ட்கள்
இந்த கூட்டு வசதிகள், 24 மணி நேர பாதுகாப்பு மூலம் குடியிருப்பவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் தருகின்றன.. சுத்தமாக பராமரிக்கப்படும் பொதுப்பகுதிகள் வாழ்வாதார தரத்தை உயர்த்துகின்றன.. அதனால்தான், வீடுகளின் சந்தை மதிப்பும் உயர்கிறது. வாடகை வருமானத்திலும் கூடுதல் பயன் கிடைக்கிறது. பெரும்பாலான மக்கள் தனி வீடுகளை விட அப்பார்ட்மென்ட்களில் வாழ அதிகம் விரும்ப காரணமே இதுதான்.
என்றாலும், இதுவரை தமிழகத்தில் அடுக்குமாடி வீடு வாங்கும்போது, கட்டுமான ஒப்பந்தத்திற்காக தனியாகவும், நிலத்தின் பிரிபடாத பங்குக்காக தனியாகவும் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை இருந்தது. இதனால் ஒரே வீட்டுக்காக 2 முறை பத்திரப்பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கட்டுமான செலவு - தனி ஆவணம்
முதலில் கட்டுமான ஒப்பந்தம் தனி ஆவணமாக பதிவு செய்யப்பட்டது. அதற்காக கட்டுமான செலவை அடிப்படையாக கொண்டு முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அதன்பிறகு அந்த வீட்டுக்கான நிலத்தின் பிரிபடாத பங்குக்காக UDS எனப்படும் தனியாக விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதனால் வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டது.
இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், 2023 நவம்பர் மாதத்தில் பதிவுத்துறை புதிய விதிமுறையை அறிமுகம் செய்தது. அதன்படி அப்பார்ட்மென்ட் வீடுகளுக்கு இரண்டு முறை பதிவு செய்வது நிறுத்தப்பட்டு, நிலமும் கட்டிடமும் சேர்த்து ஒரே முறையில் பத்திரப்பதிவு செய்யப்படும் புதிய முறை கொண்டு வரப்பட்டது.
இந்த நடைமுறை 2023 டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் கட்டுமான ஒப்பந்தத்தை தனியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
நிலத்தின் மதிப்பு - புதிய விதிமுறை
புதிய முறையில், நிலத்தின் மதிப்பும் கட்டிடத்தின் மதிப்பும் சேர்த்து ஒரு மொத்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த மொத்த மதிப்பை அடிப்படையாக கொண்டு, அடுக்குமாடி வீடு விற்பனை பத்திரம் ஒரே முறையில் பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன், 2023 நவம்பர் 30 வரை பலர் ஏற்கனவே கட்டுமான ஒப்பந்தத்தை பதிவு செய்து, அதற்கான முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்தையும் செலுத்தி இருந்தனர்.
புதிய முறையில் வீடு பதிவு செய்யும் போது, கூட்டு மதிப்பு அடிப்படையில் மீண்டும் பத்திரப்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், முன்பு கட்டுமான ஒப்பந்தத்திற்காக செலுத்திய தொகை கணக்கில் சேர்க்கப்படாததாக சில வீடு வாங்கியவர்கள் கருதினர். இதனால் தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அவர்கள் நினைக்கும் சூழல் உருவானது.
பதிவுத்துறை பிறப்பித்த அரசாணை
இந்நிலையில், 2023 நவம்பர் 30க்குள் கட்டுமான ஒப்பந்தத்தை பதிவு செய்த அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள், அவர்கள் ஏற்கனவே செலுத்திய முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்தை, கூட்டு மதிப்பு அடிப்படையில் தற்போது செய்யப்படும் பத்திரப்பதிவில் கழித்துக் கொள்ளலாம் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை, பதிவுத் துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்துள்ளார். அதில்,"2023 டிசம்பர் 1 முதல் கூட்டு மதிப்பு அடிப்படையில் அடுக்குமாடி வீடு விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதில், 2023 நவம்பர் 30 வரை கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்தவர்கள் இருந்தால், அவர்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை, தற்போதைய பத்திரப்பதிவின்போது கழித்துக் கொள்ளலாம். இதனால், மீதமுள்ள தொகையை மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பயன்கள்
இந்த அறிவிப்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? அடுக்குமாடி வீடு வாங்கியவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிதி சுமை குறையும்... 2023 நவம்பர் 30க்குள் கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்தவர்கள், கூட்டு மதிப்பு காரணமாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.... இதனால் வீடு வாங்குபவர்களின் மொத்த செலவு குறையும்.
சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செலவுகள் சரியாக கணக்கிடப்படுவதால், தேவையற்ற கூடுதல் கட்டணங்கள் தவிர்க்கப்படும்... வாங்குபவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பும் உறுதியாகும்.. பத்திரப்பதிவில் தெளிவு ஏற்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சர்ச்சைகளும் குறையும். நம்முடைய அரசின் இந்த நடவடிக்கை, வீடு வாங்குவோரிடையே நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications