சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற, இந்த 4 வருடத்தில் மட்டும், இதுவரை, 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியுள்ளது. அதாவது, வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளன. இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி கடந்த மாதம் சட்டசபையிலும் பெருமிதமாக குறிப்பிட்டிருந்தார்.. இந்நிலையில், முகூர்த்த நாட்களை முன்னிட்டு, தமிழக பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கமாகும்.. அதிலும் குறிப்பாக முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. எனவேதான், முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வழக்கமாக சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
சுபமுகூர்த்த தினம்
இந்நிலையில், வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான இன்று 5ம் தேதி, நாளை 6ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனை ஏற்று பதிவுத்துறை தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்..
அந்த அறிவிப்பில், "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
2 நாட்களும் கூடுதல் டோக்கன்
தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான இன்று (05.06.2025) மற்றும் நாளை (06.06.2025) அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 மற்றும் 06.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆவணப் பதிவுகள்
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்படடுள்ளது.
பதிவுத்துறையின் இந்த அறிவிப்பினை பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.. காரணம், சுபமுகூர்த்த தினங்களில் பெரும்பாலான பொதுமக்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் அடைவதால், அன்றைய தினம் அதிக டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தியபடி உள்ளது..
அதிக பத்திரப்பதிவு
கடந்த மார்ச் மாதம்கூட பெயிரா ஒரு கோரிக்கை விடுத்திருந்தது.. அதில், பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய முன்பதிவு டோக்கன் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன் பெரும்பாலானோர் முன்பதிவு டோக்கன் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கு ஆளாவதால், அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து 03.03.2025 சுபமுகூர்த்த தினத்தில் தேவையான முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
பெயிராவுக்கு மகிழ்ச்சி
இப்போது பதிவுத்துறையானது, அனைத்து தரப்பு மக்களும் பலன்களை பெறும்வகையில், இன்று, நாளை என 2 தினங்களுக்கு கூடுதல் டோக்கன்களை ஒதுக்கியிருக்கிறது.. வழக்கமாக 100 டோக்கன் வங்கப்படும் இடங்களில் 150 டோக்கன்கள், வழக்கமாக 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறையின் அறிவிப்புக்கு பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.. இதன்மூலம் இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் டாக்டர் ஹென்றி.
The Tamil Nadu Registration Department has increased token allocations for property registrations on Muhurtham days, responding to public demand. This initiative aims to ease access for citizens wishing to register documents during these auspicious days.