தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. இன்று சிறப்பு முகாம்
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு கடன்களை அடைக்கவும் வட்டி சலுகை பெறவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் வட்டி சலுகை பெற கூட்டுறவு வங்கி கிளைகளில் இன்று சிறப்பு கடன் தீர்வு முகாம் நடைபெறுகிறது.
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை கட்டாமல் தவறவிட்டிருந்தால் அல்லது கடன்களை விரைவாக அடைக்க விரும்பினால், மேலும் வட்டி சலுகை பெற விரும்பினால், இன்று உங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிளுக்கான சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளுங்கள்.. நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் வட்டி சலுகை பெற இன்று நடைபெறும் சிறப்பு முகாம நல்ல உதவியாக இருக்கும்..

திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்தும் வகையில் இன்று (சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே கூட்டுறவு சங்கங்களில் நீண்ட காலமாக கடன் நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு வட்டி சலுகை பெற ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இச்சலுகை வருகிற 12.03.2024 அன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தகுதி வாய்ந்த கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை அணுகி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு கூறியிருந்தார்..
முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் மார்ச் 2-ந் தேதி (இன்று) நடக்கிறது.
கன்னியாகுமரி மண்டலத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பீப்பிள்ஸ் நகர கூட்டுறவு வங்கி, கல்குளம் நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மங்களவாடி பல்நோக்கு கூட்டுறவு விவசாய சங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
31-12-2022 அன்று கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்து தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளான 13-12-2023-ல் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்கள் அனைத்தும் இத்திட்டத்தில் தகுதிபெறும். இந்த திட்டத்தின்படி கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9 சதவீத சாதாரண வட்டி வசூலிக்கப்படும்.
கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத்தொகையில் 25 சதவிகித தொகையை செலுத்தி 12-3-2024-ம் தேதிக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். எஞ்சிய தொகையினை 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளில் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி வட்டி சலுகை பெறலாம்.












Click it and Unblock the Notifications