சென்னை மருத்துவர் உடல் அடக்கத்துக்கு எதிர்ப்பு- பெண் உட்பட 14 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையை சேர்ந்த மருத்துவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட இருந்தது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் தாக்குதல் நடத்தினர். மருத்துவரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மீதும் ஓட்டுநர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொரோனவால் மரணித்தோர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்போருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதேபோல் மாநில அரசும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. இதையடுத்து மருத்துவரின் உடல் வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த 14 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications