ஒருமணி நேரத்திற்கு மேலாக நிற்கிறோம்.. பஸ் வரல.. ஆட்டோ, டாக்சி ரேட்டை கூட்டிட்டாங்க.. மக்கள் குமுறல்
சென்னை: சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். முன்னறிவிப்பு இன்றி இந்த போராட்டம் நடைபெற்றதால் பயணிகள் பேருந்து நிலையங்களில் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆட்டோ, டாக்சி கட்டணமும் உயர்ந்ததாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் இன்று மாலை திடீரென மாநகர போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாத வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவுட் சோர்ஸிங் முறையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆட்கள் பணியமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பேருந்து ஓட்டுநகர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அரசுக்கு ஆதரவான தொழிற்சங்க இயக்கங்களை வைத்து குறைந்த அளவிலான பேருந்துகளே சென்றதை காண முடிந்தது. குறிப்பாக ஆவடி உள்ளிட்ட டெப்போவில் இருந்து பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. பேருந்து ஊழியர்களின் இந்த போராட்டத்தால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாகவும் பேருந்துகள் எதையும் காணவில்லை என்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் பயணிகள் ஆவேசத்துடன் கூறினர். பேருந்துகளின் வேலை நிறுத்தத்தால் ஆட்டோ, டாக்சிகளில் மக்கள் அதிக அளவில் நாட தொடங்கினர். இதனால் ஆட்டோ, டாக்சி கட்டணமும் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது. பயணிகளும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நிற்கிறோம் பஸ்களே வரவில்லை என்று கூறியதை காணமுடிந்தது.












Click it and Unblock the Notifications