முகப்பேரிலும் தொட்டாலே உதிரும் நிலையில் குடியிருப்பு கட்டிடம்.. அதிகாரிகள் கவனிக்க வேண்டுகோள்
சென்னை:முகப்பேர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தரமற்று இருப்பதாக அங்கு குடியிருக்கும் அரசு பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
முகப்பேர் அடுத்த பாடிக்குப்பம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தரமற்ற குடிநீர்
இந்த குடியிருப்பில் உள்ள சுமார் 236 வீடுகளை அரசு வேலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு சொந்தமாக வழங்கப்பட்டுள்ளது.. தற்போது இரண்டு ஆண்டுகளான நிலையில் குடியிருப்பு கட்டிடங்கள் தரமற்று இருப்பதாக அங்கு தங்கி இருப்பவர்கள் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து வீடு வாங்கியது முதல் இதுவரை ஒரு வீட்டிற்கு வரும் குடிநீர் அளவே வருவதாகவும், குடிநீர் தரமற்று இருப்பதாகவும் கடல் நீரை விட உப்பின் அளவு அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிமெண்டு பூச்சுகள் உதிர்கின்றன
குடிநீர் பணம் கொடுத்து வாங்கி வருவதால் 236 வீடுகளுக்கு சேர்த்து ஒரு மாதத்திற்கு ரூ.2 லட்சம் செலவு ஏற்படுவதாக கூறியுள்ளனர். வீட்டின் சுவர்கள் உடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்வதாக கூறும் மக்கள் அதனை மறைப்பதற்காக பூசு வேலை செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மழை காலங்களில் வீட்டின் உட்பகுதிகளில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை இல்லை
வீட்டின் வெளிபுறங்களில் விரிசல் விரிசலாக காணப்படும் சுவர்களை பட்டி வைத்து பூசி மறைத்துள்ளதாகவும் திறந்து வைத்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் சுவர்கள் உடைவதும், மழைகாலங்களில் நீர் கசிவது போன்ற பிரச்சினையுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புளியந்தோப்பு கட்டிடம்
சென்னையில் ஏற்கனவே புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 உதவி பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.அந்த கட்டுமானத்தின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி குழுவினரும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications