பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசு ஊழியர்களுக்கு வருமா? இன்னும் 11 மாசத்தில் பாருங்க.. பாண்டியராஜன் சுளீர்
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அதுகுறித்த விரைவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை.. இப்படிப்பட்ட சூழலில் எதிர்க்கட்சிகளும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.. அந்தவகையில், அதிமுக மீண்டும் திமுக அரசை சாடி, அரசு ஊழியர்களை சப்போர்ட் செய்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் சம்பந்தமான கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.. இதனை வலியுறுத்தியே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் அவ்வப்போது ஈடுபட்டும் வருகிறார்கள். 4 வருடங்கள் கடந்தும் திமுக அரசு தன்னுடைய வாக்கை காப்பாற்றவில்லை என்று அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்..

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்தினால், அதனால் அரசுக்கு எந்தவிதமான சிக்கலும், சுமையும் இருக்க போவதில்லை, அப்படியிருக்கும்போது, ஏன் அரசு தயக்கம் காட்டுகிறது என்று ஊழியர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாகவும் கவலையுடன் கூறுகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இதைத்தான் எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன.. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்துவரும்போது, அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் அந்த மாநிலங்களில் எந்த முடிவையும் எடுக்கவில்லை..
அப்படியிருக்கும்போது, குழு நாடகங்களை நடத்துவதை தவிர்த்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதிமுக மீண்டும் விமர்சனம்
இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜனும் திமுக அரசை கடுமையாக சாடியிருக்கிறார்.. அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நீட் தேர்விற்காக உயிர் இழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசும்போது, "அமைச்சர் பொன்முடி மீது 2 நாட்களில் வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையானால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
பொன்முடி மனிதர் அல்ல
பொன்முடி மனிதர் அல்ல மிருகம் போல் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும் அசிங்கப்படுத்துவது போல் பலமுறை பேசியிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வனத்துறை சரியான துறை தான். மிருகங்கள் இருக்கக்கூடிய துறை. அவர் எந்த துறை அமைச்சராகவும் இருக்கக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தும்.
டிபன் பாக்ஸில் அரிவாளை வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவது எவ்வளவு கேவலமான விஷயம். இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தனர். கல்வி அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு போஸ்டர் ஒட்டுவதே வேலையாக உள்ளது.
டெபாசிட் இழக்கும்
அரசு ஊழியர்களும் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என்று உறுதி தந்தார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. அனைத்து ஊழியர்களுமே அதிருப்தியில் உள்ளதால், இதன் தாக்கம் இன்னும் 11 மாதங்களில் தெரிந்துவிடும்.. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக டெபாசிட் இழக்கும் என்றார்.
ஏற்கனவே அரசு ஊழியர்கள் திமுக அரசு வருத்தத்தில் உள்ளனர்.. கோரிக்கையை விரைந்து நிறைவேற்றாவிட்டால், அரசு ஊழியர்களின் பெருவாரியான ஆதரவை அதிமுக அறுவடை செய்ய காத்திருப்பதாக அரசியல் நிபுணர்களும் கருத்து கூறிவருகிறார்கள்.. இந்நிலையில் அரசு ஊழியர்களின் கவனத்தை பெறும் வகையில், அதிமுக தலைவர்களும் ஆதரவு தந்து பேசி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications