தூத்துக்குடியில் “செந்தமிழ் திருவிழா”.. பாரதிதாசன் பிறந்தநாள் வருதுல! தயாராகும் தமிழ்நாடு அரசு
சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் செந்தமிழ்த் திருவிழா நடத்த இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "நாவலரும் பாவலரும் நயந்தேத்தும் நயனுடையார், பொன்னை விடப் பொலிவுடையார், பொதியம்போல் வலிவுடையார். புத்துலகச் சிற்பி புரட்சிக்கவிஞரின் புகழ்போற்றிப் பரவும் பூரிப்புப் பெருவிழா!
பாவாண்ட பாவேந்தர் பன்முகமும் பளிச்சிடவே. நாவாண்ட நல்லறிஞர் நல்விருந்து படைக்கின்ற நற்றமிழ்க் கலைவிழா!

பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவோ வேறெதுவோ எனமயங்கும் கங்குகரையற்ற கவிதைகளின் மூலவரை முப்பொறியும் இனிக்க முத்தமிழால் முத்தமிடும் முக்கனிச் சுவைவிழா!
தமிழ்க் கவிஞர்கள் திருநாள் என்று தமிழ்நாட்டரசு உச்சிமேல் வைத்து மெச்சிப் பாராட்டும் தன்மானத் தமிழ் விழா!
அழகழகுச் சிப்பிகளால் முத்தளித்து, ஆடி வரும் அலைகளால் உப்பளித்து, தூய பெயர்பெற்றுத் துலங்கும் தொன்மைமிகு தூத்துக்குடி நகரில் நிகழ்கிறது இந்த வண்ணமயமான வசந்தவிழா!
பூங்காவில் புகுந்துவரும் தென்றல் அல்ல நாங்கள்; புயலென்று புரிந்திடுவீர் என்று பூவுலகை அதிர்வித்துப் புதுமை படைக்கின்ற பெண்ணுலகைப் பெருமைசெய்யும் வண்ணம். இவ்வாண்டுப் பாவேந்தர் பிறந்தநாள் விழா தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கலைக் கல்லூரியில் மாண்புற மலர்கிறது.
29.04.2023 சனிக்கிழமையன்று முற்பகல் 9.30 மணிமுதல் 11.00 வரை பிபத்மஸ்ரீபி கலைமாமணி டாக்டர் சீர்காழி கோ.சிவதிம்பரம் குழுவினரின் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறும். முற்பகல் 11.10 மணிமுதல் 11.30 வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் முன்னிலையில் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க உள்ளார்கள்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ) திரு.சம்சுதீன் அவர்கள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்.ந.அருள் அவர்கள் நோக்க உரையும் ஆற்ற உள்ளார்கள். முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை "புதுவையில் புறப்பட்ட புதியதோர் தீப்பிழம்பு எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.பே,சங்கரலிங்கம் அவர்கள் தலைமை உரையாற்ற உள்ளார்.
"புதுவை போற்றும் இளசை" எனும் தலைப்பில் சோழ மண்டலத் தமிழ் இலக்கிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திரு.க.சிவகுருநாதன் அவர்களும், தமிழியக்கம்" எனும் தலைப்பில் கலைப் பண்பாட்டுத் துறை மேனாள் இணை இயக்குநர் முனைவர். இரா.குணசேகரன் அவர்களும், புரட்சிக் கவியின் புரட்சிக் கவி எனும் தலைப்பில் வ.உ.சி கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சி.ஜாக்சன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.
பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை நடைபெறவிருக்கும் கவியரங்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் தலைமையில் "பாவேந்தர் பார்வையில்" எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது. "அன்னை மொழி நேசி" எனும் தலைப்பில் கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களும், "ஆசையாய்க் காதலி" எனும் தலைப்பில் சேரன்மாதேவி தமிழ்ப் பேரவைத் துணைத் தலைவர் கவிஞர் சேரை.ப.பாலகிருஷ்ணன் அவர்களும், "இல்லறம் பேணு" எனும் தலைப்பில் தூத்துக்குடி எ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க.சுப்புலட்சுமி அவர்களும், "ஈட்டிப் போல் செல்" எனும் தலைப்பில் கவிஞர் தஞ்சை இனியன் அவர்களும் கவிப்பாட உள்ளார்கள்.
திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி நன்றியுரை ஆற்றவுள்ளார், ஊடகவியாளர் மு.செண்பககாசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவுள்ளார். இயல் நடக்கிறது. இசை மணக்கிறது; ஆடகச் செம்பொன்னாய் நாடகத் தமிழ் வந்து நற்புலவர் நாவரங்கத்தில் ஒளிர்கிறது! கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறிந்து ஒருநாள் முழுவதும் உவகைக் கடலாட உணர்வாளர் வாருங்கள்! ஆயிரம் பூக்களை அன்பளாவிய அகத்தில் சுமந்தபடி- பாயிரம் போலே பார்வைகள்தோறும் பரவசம் கமழ்ந்தபடி- காத்துக் கிடப்போம்- தூத்துக்குடியில் தங்களை வரவேற்க! பாவேந்தர் புகழ் பாட!" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications