ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுகிறோம்: தமிழக அரசு
சென்னை: முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கான ரூ.68 கோடி டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.68 கோடி டெபாசிட் செய்தது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியையும் தமிழக அரசு வழங்கியது.

இதை எதிர்த்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபக், தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது எனவும், இல்லத்தை கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை எனக்கூறினர். மேலும் அதிமுக வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் சென்னை ஆறாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் தாக்கலான மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும்,கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications