தொற்று பயம் கிடையாது... கற்றாழையில் புதிய வகை நாப்கின்களை உருவாக்கி அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
சென்னை: தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த அரசு மாணவர்கள் கற்றாழையில் நாப்கினை உருவாக்கி அசத்தியிருந்தனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் சூழலில், அப்பள்ளிகளின் மாணவர்கள் செய்த சாதனைகளை உரக்க சொல்ல வேண்டிய நேரமிது. இன்று நாட்டின் வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானோர்கள் அரசு பள்ளியில் படித்து வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இஸ்ரோ தொடங்கி பல்வேறு துறையில் அரசு பள்ளி மாணவர்களின் சாதனைகள் கொடிகட்டி பறக்கிறது. ஆனால் பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளிகள் குறித்த பார்வை தலைகீழாக இருக்கிறது. இப்படி இருக்கையில்தான் இதனை மாற்றும் விதமாக அரசு பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

சென்னை கிண்டியில் பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ச்சியில் இந்த கண்டுபிடிப்புகளை அரசு பள்ளி மாணவர்கள் வரிசைப்படுத்தியிருந்தனர். அதில் கற்றாழை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நாப்கின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இது குறித்து கரூரை சேர்ந்த ஜி.உடையார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் கூறுகையில்,
"இந்த நாப்கின் சீமை கற்றாழை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் சிறப்பம்சம் அதிக ஈரத்தை உறிஞ்சும் திறன்தான். மட்டுமல்லாது கடைகளிலிருந்து நாப்பின் வாங்கி பயன்படுத்துவதால் சில பாதிப்புகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். அதை தவிர்க்கும் வகையில் அதற்கு மாற்றாக நாங்கள் இந்த நாப்பினை தயாரித்திருக்கிறோம். இந்த வகை கற்றாழைகள் தண்ணீர் குறைந்த இடத்திலும் செழிப்பாக வளரும். இதற்கு காரணம் தண்ணீர் உறிஞ்சும் திறன்தான். மட்டுமல்லாது இது எளிதில் மக்கும் திறன் கொண்டிருப்பதால் சுற்று சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது" என்று கூறியுள்ளனர்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களே சில நேரங்களில் அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூட முடிந்துவிடுகிறது. நாப்கின்களில் எஸ்ஏபி எனும் ரசாயனம் இருப்பதாகவும், இது ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பியோஜின்கள் உள்ளிட்ட பாக்டீரியாக்களை உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (டிஎஸ்எஸ்) எனும் அரிய வகை நோய் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நோய் உயிர்க்கொல்லி நோயாகும். எனவே இதை தவிர்க்க மருத்துவ உலகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் புதிய வகை நாப்கின்களை கண்டுபிடித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications