திமுக அதிமுகவின் டீல்.. விஜய்யை விட்டு கிளம்பிய கான்வாய்.. முடிச்சுப்போட்டு அரண்டுபோன தவெக புள்ளிகள்
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு கடந்த 3 நாட்களாக வந்த கான்வாய் வாகனங்கள் விலக்கப்பட்டது தவெகவினரை அதிர வைத்தது. பதவியேற்புக்கு ஆளுநர் விஜய்யை இதுவரை அழைக்காதது, திமுக - அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதக தகவல் பரவியது எல்லாம் சேர்த்து, கான்வாய் வாகனங்கள் விஜய் அலுவலகத்தை விட்டு கிளம்பியதால் தவெகவினர் அரண்டு போயினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டை அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தனது முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வென்றது. திமுக 59 இடங்களிலும் அதிமுக 47 இடங்களிலும் வென்றிருக்கிறது.

தவிக்கும் தவெக
தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சியைப் பிடிக்க போதுமான பெரும்பான்மை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க 118 எம்எல்ஏ-க்கள் தேவைப்படும் நிலையில், தவெக வசம் 108 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு தந்தும் தவெக-விற்கு 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
பெரும்பான்மைக்கு இன்னும் 6 சீட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேசி வருகின்றனர். அவர்களும் தங்களின் முடிவை கலந்தாலோசித்து கூறுவதாக தெரிவித்து இருக்கின்றனர். அதிமுக தவெகவிற்கு ஆதரவு அளிக்காது என உறுதியாக தங்களது முடிவை கூறியது.
118 எங்கே?
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், ஆளுநர் தரப்பில் விஜய்யிடம் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை வழங்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளை பதவியேற்பு நிகழ்வு நடைபெறாது எனத் தெரிகிறது.
இந்த சூழலில் தான், யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டை மாறி, மாறி ஆண்ட திமுக-வும், அதிமுக-வும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்காமல் தடுப்பதற்காக கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி?
பிரபல அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த கருத்தை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கேட்டையன் ஆகியோருடன் அக்கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை வீட்டுக்கு விஜய் புறப்பட்டார். அப்போது கான்வாய் வாகனங்கள் விஜய்யை பின்தொடரவில்லை.
கான்வாய் விலகல்
தவெக. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்களுடனான பாதுகாப்பு கடந்த 3 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றே அவருக்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. அவை தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் காவல்துறையினர் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர். விஜய்க்கு. முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு வளையம் எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.
உண்மையான காரணம்?
ஆனால், கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஜய், ஆளுநர் மாளிகைக்கு சென்றபோது, முதலமைச்சருக்கான சிறப்பு கான்வாய் வாகனங்களுடன் சென்றார். இது குறித்து அதிகாரிகளிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார், "முதல்வராக பதவியேற்காத நிலையில் விஜய்க்கு எப்படி இந்த கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டன?" என ஆளுநர் அர்லேகர் கேட்டதாக கூறப்படுக்றது.
அதன் தொடர்ச்சியாகவே, விஜய்க்கான கான்வாய் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மீண்டும் அவருக்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கான்வாய் வாகனங்கள் விலக்கப்பட்டதற்கும் - திமுக அதிமுக கூட்டணி என பரவிய வதந்திக்கும் முடிச்சுப்போட்டு பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் தவெகவினர் அதிர்ந்து போனது என்னவோ உண்மை.












Click it and Unblock the Notifications