ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று - முதல்வர் மு.க ஸ்டாலின்
சென்னை: மாநில வளர்ச்சி பிடிக்காமல் சிலர் ஆளுநர் பதவியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்க மத்திய உள்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கிடப்பில் வைத்து இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் மு.க ஸ்டாலின் அரசின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினர். அப்போது அவர்கூறியதாவது:-
அரசின் நடவடிக்கை அனைத்திற்கும் ஆளுநர் ரவி அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

இப்போது உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்து உடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகம் ஆடுகிறார். அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டு போகட்டும். ஆனால் நாம் எப்போது சட்டத்தின் வழி நடப்போம்.
சட்டமன்றத்தின் மரபு, மாண்பு இறையாண்மையை காத்திட குடியரசுத்தலைவர் பற்றியோ.. அல்லது நீதிமன்றங்கள் பற்றியோ.. அல்லது ஆளுநர் பற்றியோ எந்த கருத்துகளையும் சொல்ல அவசியமும் இல்லை. அதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தினடிப்படையில் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications