கைகொடுத்த அமைச்சர் சேகர்பாபு! கண்டு கொள்ளாத ஆளுநர் ரவி! மின்னல் வேகத்தில் நேரு பிறந்தநாள் நிகழ்ச்சி!
சென்னை: ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, அமைச்சர் சேகர்பாபுவுக்கு கை கொடுக்க மறுத்ததோடு அவரை கண்டு கொள்ளாமலும் இருந்தார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், தாமோ அன்பரசன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொட்டிய மழையிலும் நேரு சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஆளுநர் ரவியை அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், தாமோ அன்பரசன், சேகர்பாபு, ஆகியோர் புத்தகங்களை பரிசளித்து வணக்கம் சொல்லி வரவேற்றனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு மட்டும் ஆளுநர் ரவியிடம் கை கொடுத்தார். அமைச்சர் தன்னிடம் கை கொடுப்பதை கண்டுகொள்ளாத ஆளுநர் ரவி, சேகர்பாபுவிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த துணை மேயர் மகேஷை பார்த்து வணக்கம் சொன்னார்.
அவரைத் தொடர்ந்து வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானாவை பார்த்து வணக்கம் சொன்ன ஆளுநர் ரவி, கடகடவென நேரு படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டுவிட்டார். இதனிடையே அமைச்சர் சேகர்பாபுவின் முகம் வெளிறிப் போனாலும் அதை அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனால் தான் மற்ற இரண்டு அமைச்சர்களும் எதுக்குப்பா வம்பு என வணக்கம் வைப்பதோடு நிறுத்திக்கொண்டு ஆளுநருக்கு உஷாராக கை கொடுக்கவில்லை.
ஆளுநர் திமுக இடையேயான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவியின் பேச்சுக்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையான முறையில் கண்டனங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மழை காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நிகழ்ச்சி மின்னல் வேகத்தில் நடைபெற்று முடிந்தது.












Click it and Unblock the Notifications