"தமிழ்நாடு"முதலமைச்சர் அவர்களே! தமிழில் பேசிய ஆளுநர் ரவி! அதுக்கு முதல்வர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே
சென்னை: இன்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவியின் பேச்சு அனைவரையும் கவனிக்க வைப்பதாக இருந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 762 பேருக்கு அவரே பட்டங்களை வழங்கினார்.

கவுரவ டாக்டர், முனைவர் பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றோருக்குக் குடியரசுத் தலைவர் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் குடியரசுத் தலைவருடன் ஆளுநர் ஆர்.என் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மோதல்: ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டத்திற்கும் ஆளுநர் அனுமதி அளிப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டே இருக்கிறது. அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ரவி பல நேரங்களில் கூறும் கருத்துகள் தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தி, முதலீடுகளை ஈர்ப்பது, கார்ல் மார்க்ஸ் எனப் பல விவகாரங்களை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
குறிப்பாகச் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைதை தொடர்ந்து அவரது இலாகாக்கள் மாற்றப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர்வார் என முடிவெடுத்த தமிழக அரசு, இதற்கான கோப்புகளைத் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியது.
தமிழ்நாடு ஆளுநர்: இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாடு ஆளுநர் ரவி திரும்பி அனுப்பியது சர்ச்சையானது. அப்போது செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக எல்லாம் அறிவித்து, பின் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். அதேபோல பட்ஜெட் கூட்டத்தொடர் சமயத்திலும் தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாகப் படிக்காமல் சில வரிகளை விட்டும், தமிழ்நாடு என்பதற்குப் பதிலாகத் தமிழகம் என்றும் வாசித்திருந்தார். இப்படி தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
இந்தச் சூழலில் இரு தலைவர்களும் ஒன்றாக இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே நின்றனர். இதற்கிடையே இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு அனைவரையும் கவனிக்க வைப்பதாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் அவர் மான்புமிகு பாரத குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மதிப்பிற்குரிய "தமிழ்நாடு" அரசு முதலமைச்சர் அவர்களே என்று தமிழில் பேசி தனது உரையை ஆரம்பித்தார்.
முதல்வர் ரியாக்ஷன்: ஆளுநர் இப்படி "தமிழ்நாடு" அரசின் முதல்வர் எனச் சொல்வதைக் கேட்டதும் மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் லைட்டாக சிரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. திமுகவினர் பலரும் ஆளுநரின் இந்தப் பேச்சையும் முதல்வரின் ரிஆக்ஷனையும் பகிர்ந்து வருகின்றனர். பின்னர் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்குத் தமிழிலேயே வணக்கம் சொல்லி தமிழ்நாடு ஆளுநர் ரவி தனது உரையைத் தொடர்ந்தார்.

திருவள்ளுவரின் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்.. திண்ணியர் ஆகப் பெறின்" என்ற குறள் மேற்கொள் காட்டிய அவர், உறுதியான மனமிருந்தால், சாத்தியமற்றது என எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.
பேச்சு: மேலும், பட்டம் பெறும் மாணவர்களைத் தன்னம்பிக்கையுடன் மறுமலர்ச்சி இந்தியாவில் தொழில்முனைவோருக்காக முன்னெப்போதுமில்லாத வகையில் உள்ள ஏராளமான வாய்ப்புகளை ஆராயவும், பெரிய கனவுகளைக் காணவும், தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்தி அந்த கனவுகளை நனவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இப்போது 3 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்துள்ளார். டெல்லி தமிழ்நாடு வந்த அவர் முதலில் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்குச் சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு அவர் பொம்மன்- பள்ளியைச் சந்தித்தார். அங்கிருந்து சென்னை வந்த அவரை ஆளுநர் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் நேரில் வரவேற்றனர். இன்றிரவு ஆளுநர் மாளிகையில் பாரதியார் படத் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications