பொறுப்பை தட்டிக்கழிக்கிறார் ஆளுநர்.. மத்திய அரசுக்குதான் கெட்டப் பெயர்.. சொல்கிறார் டிடிவி தினகரன்!
ஆளுநர் தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி வருவதாக கூறிய டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் நலனுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதில் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி
இந்த விவகாரம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று கூறி இருக்கிறார். ஆளுநர் தமிழ்நாடு அரசுடன் இணைந்து, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தட்டிக் கழிக்கிறார் ஆளுநர்
ஆளுநர் சொல்லும் காரணங்களுக்குள் செல்ல வேண்டும். இது மக்களின் உயிர், தமிழ்நாடு நலன் தொடர்பான முக்கியமான சட்டம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்காமல், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறுவது தட்டிக்கிழப்பது போல் உள்ளது. இது மக்கள் நலனில் அக்கறையில்லாதது போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

மத்திய அரசுக்கு கெட்டப் பெயர்
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. அவரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் கெட்டப் பெயரை உருவாக்கி வருகிறது. அது ஆளுநராக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி, அனைவரும் தமிழ்நாடு நலனுக்காக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

என்எல்சி விவகாரம்
தொடர்ந்து என்எல்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு, ஏற்கனவே விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து போராடி இருக்கிறோம். ஏற்கனவே என்எல்சி நிர்வாகம், கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கவில்லை. இன்னும் கையகப்படுத்திய நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் கைவசம் உள்ளது. இருப்பினும் மீண்டும் நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகள், பெரும் போராட்டத்திற்கான சூழலை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications