சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு பெரிய ஏமாற்றம்
சென்னை: 'சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் கையிருப்பு உள்ளது' என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். பல்வேறு ஏரியில் இருக்கும் 6 டி.எம்.சி. தண்ணீர் மூலம் அடுத்த 6 மாதத்திற்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு பிறகு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் பருவ மழை நன்றாக பெய்தால் அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சேமிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு கோடைக்கு விநியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்,
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களிடையே குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இதுவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இந்தச் சூழலிலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி சமாளிக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஏரிகளில் இருப்பு நிலவரம்
சென்னை மாநகரின் முதன்மை குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சி ஆகும். இதில் தற்போதைய நிலவரப்படி, 6.40 டி.எம்.சி (அதாவது 48 சதவீதம்) தண்ணீர் மட்டுமே சேமிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏரிகளின் கையிருப்பு 7.88 டி.எம்.சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
6 மாத தேவையை பூர்த்தி செய்யலாம்
சென்னை மாநகரின் ஒட்டுமொத்த குடிநீர் தேவைக்கு ஒரு நாளைக்கு 1,248.51 மில்லியன் லிட்டர் தண்ணீரும், மாதத்திற்கு சராசரியாக 1 டி.எம்.சி தண்ணீரும் தேவைப்படுகிறது. எனவே, ஏரிகளில் தற்போதுள்ள 6 டி.எம்.சி தண்ணீரைக் கொண்டு அடுத்த 6 மாத காலத்திற்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.
12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர்
தமிழக-ஆந்திர அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் சென்னைக்கு 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில், ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 305 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ள இந்த இக்கட்டான சூழலில், இந்த கிருஷ்ணா நதி நீர் வரத்தானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவுகிறது.
வடகிழக்கு பருவமழை தான் ஒரே தீர்வு
அடுத்த ஆறு மாத கால தேவையைத் தற்போதைய இருப்பைக் கொண்டு சமாளித்துவிட முடியும் என்றாலும், அடுத்த ஆண்டு கோடைகாலத்தைக் கடக்க வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை மிகவும் முக்கியம். வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்தால் மட்டுமே ஏரிகள் மீண்டும் முழுமையாக நிரம்பும்.
ஒருவேளை இந்த மழையும் பொய்க்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடும். இதனால், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதே வேளையில், ஆந்திர அரசிடமிருந்து ஒப்பந்தப்படி உரிய தண்ணீரைப் பெற்று ஏரிகளில் சேமிப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications