ஏழை பெண் ஓட்டுநருக்கு.. புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த ஆளுநர்! 3 மாதத்தில் மாறிய வாழ்க்கை
சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தினமும் வந்து வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்த பெண் ஆளுநர் ஆர்என் ரவியிடம் சொந்தமாக ஆட்டோ வாங்கி தரும்படி கூறினார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஆளுநர் ஆர்என் ரவி புதிய ஆட்டோவை வழங்கினார். இதனால் அந்த பெண்ணின் வாழ்க்கை 3 மாதத்தில் மாறி உள்ளது.
இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். மேலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தின் பாரத்தை குறைக்க வேலைகளுக்கு சென்று வருகின்றனர். சென்னையில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் விளம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலா. இவரது கணவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதுதவிர அமலாவுடன் அவரது அம்மா, மாமியார் ஆகியோர் உள்ளனர். 2 மகள்களும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
குடும்ப சூழல் காரணமாக அமலாவும் வேலைக்கு சென்று வந்தார். முதலில் வீட்டு வேலை செய்தார். அதன்பிறகு அலுவலகம் ஒன்றில் வேலை செய்தார். அதன்பிறகு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டினார். கொரோனா காலத்தில் அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் தவித்தது. இதையடுத்து ஆட்டோவை விற்பனை செய்தார். அதன்பிறகு மீண்டும் சென்னையில் வாடகை ஆட்டோ ஓட்டி சம்பாதித்தார்.
இந்நிலையில் தான் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் அமலா கவுரவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அமலா, ஆளுநர் ஆர்என் ரவியிடம் சொந்தமாக ஆட்டோ வாங்க உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 3 மாதம் கழிந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து அமலாவுக்கு போன் சென்றது.
ஆளுநர் ஆர்என் ரவி ஆட்டோ வாங்கி வைத்துள்ளார். வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினார். இதையடுத்து அமலா தனது மகள்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநர் ஆர்என் ரவி அவரிடம் ஆட்டோ வழங்கினார். ஆளுநர் தனது விருப்ப நிதியில் இருந்து அமலாவுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தார்.
இதுபற்றி அமலா கூறுகையில், ‛‛எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் கூலி தொழிலாளி. அம்மா, மாமியாருடன் நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம். சொந்த ஆட்டோ லாக்டவுன் வரை இருந்தது. அதன்பிறகு வாடகை ஆட்டோ எடுத்து தான் ஓட்டி வருகிறேன். கடந்த முறை ஆளுநர் விருது வழங்க அழைத்தார். அப்போது வாடகை ஆட்டோ ஓட்டுகிறேன். சொந்த ஆட்டோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். நான் சொல்லி 3 மாதம் ஆகிவிட்டது.
ராஜ்பவனில் இருந்து போன் செய்திருந்தனர். இப்போது ஆட்டோ வந்துவிட்டது. இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் எங்கள் ஊரில் இருந்து காலை 6 மணிக்கு பஸ் ஏறி 9 மணிக்கு சென்னை வருவேன். அதன்பிறகு முழு நாளும் ஆட்டோ ஓட்டி 7 மணிக்கு பஸ் ஏறி இரவு 10 மணிக்கு வீட்டுக்கு செல்வேன். சில நாட்கள் இரவு 12 மணி கூட ஆகிவிடும். இது சிரமமாக இருந்தது.
தினமும் ஆட்டோ வாடகையாக ரூ.400 கொடுக்க வேண்டும். எனக்கு கடன் உள்ளதால் அன்றைய சம்பாத்தியம் அன்றைக்கு மட்டுமானதாக தான் இருக்கும். பணத்தை சேமிக்க முடியாது. இப்போது சொந்த ஆட்டோ என்பதால் அந்த பணம் மிச்சமாகும். என் மகள்களின் படிப்புக்கு அதனை எடுத்து வைப்பேன்'' என்றார்.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ரவி, கடின உழைப்பாளி ஆட்டோ ஓட்டுநரும் முன்னோடி பெண் தொழில்முனைவோருமான அமலாவின் எழுச்சியூட்டும் பயணம் மற்றும் கனவுகளுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் தெரிவிக்கும் அடையாளமாக, புதிய ஆட்டோ சாவியை அவரிடம் வழங்கினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின்போது, தனது மீள்தன்மை, வலிமை மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையுடன் குடும்பத்தை ஆதரிப்பதற்கும், தனது மகள்களுக்கு சிறந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோ ஓட்டும் துறையில் வாடகை ஆட்டோவை ஓட்டிவரும் அன்றாடப் பணிக்காக அவர் பாராட்டப்பட்டார். தனது அமைதியான மனவுறுதியால் ஆளுநரை மிகவும் நெகிழச் செய்தார். அமலா மன உறுதி, உறுதிப்பாடு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கிய புதிய பாரதத்தின் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாடலின் முன்னோடியாகத் திகழ்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications