தமிழகத்தில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளது! மனமார பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: தமிழகத்தில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மனமார பாராட்டியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
ஆளுநர் ரவி கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் ஒன்றாக பங்கேற்றார். பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பிறகு இருவருக்கும் இடையே இருந்த பனிப்போர் குறையத் தொடங்கியுள்ளது.

உயர்கல்வி மேம்பாடு
தமிழ்நாடு உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ரவி, என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் வந்திருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறினார். சென்னை ஐ.ஐ.டி. சிறப்பாக செயல்பட்டதால் சர்வதேச அளவில் சிறந்த அடையாளத்தையும், பெருமையையும் பெற்றிருப்பதாக பாராட்டினார்.

ஆளுநர் அறிவுரை
ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர் ரவி, நல்ல யோசனைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். தமிழகத்தின் உயர்கல்வி குறித்து ஆளுநர் ரவி மனமார பாராட்டி புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. ஆளுநர் விழாவில் கலந்துகொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்த பொன்முடி, இன்று அவருடன் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

தமிழகம் தான் டாப்
பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பிறகு இருவருக்கும் இடையே இருந்த பனிப்போர் குறையத் தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இதனிடையே அந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே உயர்கல்வி தரத்தில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் தமிழகத்திற்கு பின்னால் தான் டெல்லியே இருப்பதாகவும் தெரிவித்தார். உயர்கல்விக்காக 42,000 கோடியை ஒதுக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.

தமிழ் ஆர்வம்
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் ஆளுநர் வெகு விரைவில் தமிழ் பேசுவேன் எனக் கூறியிருப்பதை வைத்து பார்க்கும் போது தமிழ் மீதான அவரது ஆர்வம் தனக்கு புரிவதாக தனக்கே உரிய பாணியில் பொடி வைத்தும் பேசினார் அமைச்சர் பொன்முடி.












Click it and Unblock the Notifications