ஐபிஎல்: சேப்பாக்கத்தில் சென்னை - ஹைதராபாத் மேட்ச்.. குடும்பத்துடன் கண்டு ரசித்த ஆளுநர் தமிழிசை
சென்னை: சென்னை - ஹைதராபாத் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று(வெள்ளிக்கிழமை) சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் கண்டுகளித்தார்.
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஹோம் அவே முறையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ஐபிஎல் போட்டிகள் கடந்த 4 ஆண்டுகள் நடைபெறாமலே இருந்தது.
இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பழையபடி ஹோம் அவே முறையில் போட்டிகள் நடக்கிறது. அதாவது 7 போட்டிகள் ஹோம் மைதானத்திலும் 7 போட்டிகள் வெளி மைதானங்களிலும் நடத்தப்படும். சென்னை மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டி இதுவாகும். ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போட்டியைக் காண்பதற்காக பல மணி நேரம் காத்துக்கிடந்து டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் எந்த அளவு ஆர்வம் அதிகரித்துள்ளது என்பதை சொல்லிவிடலாம். சென்னையில் நடைபெறும் போட்டிகள் அனைத்துமே ரசிகர்கள் வெள்ளத்தில் தான் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளை பார்க்க விஐபிக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் வருகை தந்து இருந்தனர். அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது சேப்பாக்கம் தொகுதியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம் வீரர்களுடன் வந்து போட்டியைக் கண்டு ரசித்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வந்து கண்டு ரசித்தார். அதேபோல், தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் தனது குடும்பத்தினருடன் வந்து ஐபிஎல் போட்டியை ரசித்தார். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications