ஆளுநர் இல்லத்தை மான்கள் சரணாலயமாக மாற்ற வேண்டும்.. சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ எழிலன் கோரிக்கை!
சென்னை: 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளை போலவே இம்முறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதனால் தமிழக அரசு - ஆளுநர் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருவதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5வது நாளான இன்று, திமுக எம்எல்ஏ எழிலன் 2 கோரிக்கைகளை முன் வைத்தார். அப்போது எழிலன் பேசுகையில், 1974ல் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் ராஜ் மன்னார் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்.

அந்த தீர்மானத்தில், ஆளுநர் என்பவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற ஒரு பதவியாகும். ஆளுநர் நியமனம் குறித்து அரசியலமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது. மக்களாட்சி முறையில் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். இவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியாவார். எனவே உள்ளூர் நிலைமைகளையும், அரசியல் நிலைமைகளையும் இவர் அறிந்திருக்க முடியாது. எதிர்பார்த்த வழியிலும் விடியாது.
ஆளுநர் பதவிக்காக செய்யப்படும் செலவு, சமதர்மத்திற்கும் சமுதாய முறைக்கும் ஏற்றதாக இல்லை. இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு சென்னைவாசியாக, பேரிடர்களை எதிர்கொள்ளும் ஒரு சென்னைவாசியாக பசுமை மண்டலங்களை அதிகரிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

மான்கள் சரணாலயத்தை வளர்த்தெடுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதேபோல் ஆளுநரும் அமைச்சவரையும் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அதனால் அமைச்சர்கள் தங்குமிடத்தில் அவருக்கு இல்லம் ஒதுக்கி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். ஒருவேளை அது தவறினால், நீதிபதிகளின் இல்லங்களும் அங்கு தான் இருக்கிறது.
அங்கும் ஆளுநருக்கு இடம் கொடுக்கலாம். இதன் மூலமாக இயற்கை பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக இருக்க பசுமை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதேபோல் 2வது கோரிக்கை என்னவென்றால், 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் அரசு வேலை வாய்ப்பில் ஒப்பந்த அடிப்படையில் தான் இருக்கிறார்கள்.

அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக தேர்வாணையம் மூலமாக மட்டுமே பணி வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் தேர்வாணையம் மூலமாக அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications