சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரி வழக்கு.. ஒரு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு
சென்னை: சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, முடித்திருத்தம் செய்யக்கூடிய சலூன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஊரடங்கிற்கு முன்னதாக மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்த தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடித்திருத்த தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
முடித்திருத்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதார்ர் தரப்பில், சலூன் கடை வைத்திருப்பவர்கள் வறுமையில் உள்ளதாகவும்,சிலர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனைகளுடன் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது கிராம பகுதிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக திறப்பது தொடர்பாக அரசு அறிவிக்கும் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து அரசிடம் உரிய பதிலை பெற்று தெரிவிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications