திமுகவின் வெற்றிக்கு கைகொடுத்த கிராமசபை கூட்டங்கள்... ஸ்டாலின் மகிழ்ச்சி
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை விட அதிக இடங்களில் திமுக வெற்றிபெற்றதற்கு ஊராட்சிகள் தோறும் மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டங்களே காரணமாகும்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிராமம் கிராமமாக பயணித்த மு.க.ஸ்டாலின் அங்கு கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களுடன் கலந்துரையாடினார்.
ஆனால், ஸ்டாலினின் இந்த முயற்சியை திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் புரியாத புதிராக அப்போது பார்த்த நிலையில் அவர்களுக்கு இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

கலந்துரையாடல்
நாட்டிலேயே முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்திய பெருமை திமுகவை சேரும். கிராமமக்களை சந்தித்து அவர்களின் மனதில் உள்ள நிறை குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் இந்த கூட்டங்களை நடத்தினார் மு.க.ஸ்டாலின்.

திமுக வெற்றி
கிராமப்புறங்களில் முதல்முறையாக அதிமுகவை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது திமுக. எப்போது கிராமப்புறப் பகுதிகளில் அதிமுகவின் கையே ஓங்கி காணப்படும். ஆனால் ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டம் அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து திமுகவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.

விடை
தமிழகம் முழுவதும் திமுகவினர் கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் அறிவித்த போது, அதனை மாவட்டச் செயலாளர்கள் பலரும் ரசிக்கவில்லை. இந்தக் கூட்டங்கள் வீண் செலவை ஏற்படுத்தும் என அப்போது பலரும் கமெண்ட் அடித்தனர். ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையை அவர்களுக்கு இப்போது உணர்த்தியுள்ளது.

பயணம்
கிராமசபைக் கூட்டங்களை மேலும் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதோடு முடித்துக்கொள்ளாமல் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் பரபரப்பாக தொடங்கிவிட்டது திமுக.












Click it and Unblock the Notifications