"அஞ்சலிதேவி"யின் பச்சை துரோகம்.. பரிதாப டீச்சர்.. சபாஷ் போலீஸ்..!
சென்னை: ஒரு திருட்டு சம்பவ வழக்கில், பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த வழக்கில் போலீசாரின் முயற்சிகள், பலரையும் ஈர்க்க செய்துள்ளது.
பூந்தமல்லி, சீனிவாசா நகர், வட அக்ரஹாரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஷியாமளா.. 62 வயதாகிறது.. இவர் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்... தனியாக வசித்து வரும் இவர், பூந்தமல்லி போலீசில் புகார் ஒன்றை தந்திருந்தார்.
முழுக்க முழுக்க வதந்தி.. 36 பேரை விடுவியுங்கள்.. முஷ்ரப் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை: ஜவாஹிருல்லா
ஜோசப்
அந்த புகாரில், "தன்னுடைய வீட்டில் 16 சவரன், 300 கிராம் வெள்ளியை காணவில்லை என்றும், வீட்டில் வேலை செய்யும் பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும், ஆனால், வீட்டின் பூட்டுக்களும் உடைக்கப்படவில்லை" என்று தெரிவித்திருந்தார்... இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியை வீட்டுக்குள் வந்து நேரடியாக ஆய்வு செய்தனர்... விசாரணையையும் துவக்கினர்.. அப்போது, வெளியாட்கள் யாரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெளிவாக தெரியவந்தது..
பார்வையற்றவர்
அப்படியானால், ஷியாமளாவிற்கு நன்கு அறிமுகமானவர்களே திருடி இருக்க வேண்டும் என்று அடுத்தக்கட்ட முடிவுக்கு வந்த போலீசார், வீட்டு வேலைக்கார பெண் மீதான விசாரணையை திருப்பினர்.. ஆனால், ஷியாமளா சொன்னது போல, வீட்டு வேலைக்கார பெண், இந்த திருட்டில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது.. இதையடுத்து, நகை திருடுபோன நாட்கள் குறித்து ஷியாமளாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து மீண்டும் ஷியாமளா போலீசில் சொன்னார்.
முருகன் டிரைவர்
தன்னுடைய வீட்டில் முன்பு வேலை செய்த பெண் ஒருவர், திருவண்ணாமலையில் இறந்துவிட்டதால், அவரது வீட்டுக்குச் செல்ல முடிவு செய்து, ஆவடியில் அவரைபோலவே, கண் பார்வையற்ற மதுமதி என்பவரையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை சென்றதாக கூறினார்.. அப்போது தனக்கு நன்கு அறிமுகமான, எப்போதும் வீட்டுக்கு வந்து செல்லும் கார் டிரைவர் முருகனின் சொந்த காரில்தான் சென்று வந்ததாக சொன்னார்... உடனே போலீசார், "அப்படியானால் நீங்கள் திருவண்ணாமலை சென்ற நாளில் என்ன நடந்தது?" என்று விசாரித்தனர்.
அஞ்சலிதேவி யார்
உடனே ஷியாமளா, "எனக்கு தெரிந்த முருகனுக்கு போன் செய்து வரச்சொன்னேன்... காரில் ஏறி ஆவடி சென்றோம். அப்போது முருகன், செல்போனை பூந்தமல்லியில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து விட்டதாக சொன்னார்.. அதனால் மறுபடியும் பூந்தமல்லி வந்தோம். சாவியை முருகனிடம் தந்தேன்.. அவர்தான் வீட்டுக்குள் சென்று, ஒரே நிமிஷத்தில் செல்போனையும் எடுத்து விட்டு வந்து விட்டார்.. அதனால் அவர் கண்டிப்பாக ஒரு நிமிஷத்துக்குள் நகையை திருடியிருக்க முடியாது.. இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் இல்லை" என்றார்... ஷியாமளா இப்படி சொன்னாலும், முருகன் மீதுதான் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது.
சிசிடிவி காட்சிகள்
உடனே முருகனிடம் விசாரணை ஆரம்பமானது.. ஷியாமளா சொன்னதை போலவே முருகனும் அன்று நடந்த சம்பவத்தை அப்படியே சொன்னார்.. எனினும் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் நீடித்தபடியே இருந்ததால், தெருவில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்... அந்த காட்சியில், ஷியாமளாவின் வீட்டில் இருந்து புறப்படும்போது, ஷியாமளா மற்றும் முருகன் ஆகியோர் மட்டுமே காரில் செல்வது பதிவாகி இருந்தது.. பிறகு மறுபடியும் கார் திரும்பி வரும்போது, அதிலிருந்து முருகன் மட்டும் காரைவிட்டு இறங்குவதும், காருக்குள்ளேயே ஷியாமளா, மதுமிதா ஆகியோர் உள்ளதும், வீட்டுக்குள் இருந்து முருகன் திரும்பும்போது, அவருடன் ஒரு பெண் வருவதும், அவரும் காரில் முன் பக்கத்தில் முருகனுடன் உட்கார்ந்து கொள்வதும் பதிவாகி இருந்தது.
மதுமதி
இதை பார்த்ததும் போலீசுக்கு மேலும் சந்தேகம் அதிகமானது.. காரில் வந்து ஏறும் அந்த பெண் யார்? என்ற என்பது குழப்பமானது.. காரில் அந்த பெண் ஏறிக்கொண்டது பற்றி சியாமளாவுக்கோ, மதுமதிக்கோ தெரியவில்லை.. காரணம், அவர்கள் 2 பேருமே பார்வையற்றவர்கள் என்பதால், அந்த பெண் காரில் ஏறியதை அறியாமல் இருந்தனர்.. முருகனும் விசாரணையின்போது, அந்த பெண்ணை பற்றின விஷயத்தை சொல்லவில்லை என்பதால், போலீசார் முருகனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர்.. அப்போதுதான் திருட்டு சம்பவத்தை முருகன் ஒப்புக் கொண்டார். போலீசில் முருகன் தந்த வாக்குமூலம் இதுதான்:
ஷியாமளா
ஷியாமளாவுக்கு திருவல்லிக்கேணியில் ஒரு வீடு இருக்கிறது.. அந்த வீட்டில் வசிக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த அஞ்சலிதேவி 27, எனக்கு பழக்கமானார்.. நாங்கள் இருவரும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள்... நான் சென்னையில் சொந்த காரை வாடகைக்கு ஓட்டி வருகிறேன்... அஞ்சலிதேவிதான், ஷியாமளாவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்... இதனால் என்னுடைய காரில்தான் ஷியாமளா வெளியில் செல்வார்... எனக்கும் அஞ்சலிதேவிக்கும் இடையே இருந்த பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவரை விட்டு அவர் பிரிந்து விட்டார்... ஷியாமளா, திருவல்லிக்கேணியில் இருந்து பூந்தமல்லிக்கு வந்தாலும் என்னுடைய காரை பயன்படுத்தி வந்தார்.
அஞ்சலி தேவி
ஷியாமளா வீட்டு பீரோ சாவியை எங்கு வைப்பார் என்பதெல்லாம் அஞ்சலிதேவிக்கு நல்லா தெரியும்... சம்பவத்தன்று, நாங்கள் புறப்படுவதற்கு முன்பே, அஞ்சலிதேவியை வீட்டுக்குள் சென்று பதுங்கும்படி சொல்லியிருந்தேன்.. அவரை உள்ளே வைத்துதான் பூட்டிவிட்டு சென்றோம்... அவர் அந்த நேரத்தில் நகைகளை திருடிவிட்டார்... பிறகு, நான் போனை வைத்து விட்டு வந்து விட்டேன் என்று ஷியாமளாவிடம் சொல்லியதும், மறுபடியும் வீட்டுக்கு வந்தோம்...
அஞ்சலிதேவி
நான்தான் வீட்டை திறந்தேன். பிறகு, அஞ்சலியை வெளியே அழைத்து வந்தேன். அவரையும் எங்களுடன் காரில் ஏற்றிக்கொண்டேன். அஞ்சலியை முன் சீட்டில் உட்கார் வைத்தேன்... இது பார்வையற்ற ஷியாமளா, மதுமதிக்கு தெரியாது.. பிறகு, பூந்தமல்லியை தாண்டியதும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்று காரில் இருந்து இறங்கினேன். அப்போது அஞ்சலி தேவியை காரில் இருந்து இறக்கி ஆட்டோவில் வீட்டுக்குச் செல்லும்படி சொல்லிவிட்டேன். அவரும் நகையுடன் வீட்டுக்குச் சென்று விட்டார். எங்களை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தோம். இப்போது மாட்டிக்கொண்டோம்" என்றார்..
துலக்கிய துப்பு
இப்போது இந்த கள்ள ஜோடி கைதாகி சிறையில் உள்ளது.. இந்த வழக்கை சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினார்கள்.. இந்த சம்பவம் குறித்து உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி சொல்லும்போது, "கண் தெரியாதவர் என்பதால் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த வழக்கை ஒரு சவாலாக நினைத்து கண்டுபிடித்தோம்" என்றார்.. சபாஷ் போலீஸ்..!!!