மீண்டு(ம்) வரும் தலைநகர்.. 4ஆவது நாளாக 1000க்கு கீழ் கொரோனா பாதிப்பு.. பாசிடிவ் விகிதமும் மிக குறைவு
சென்னை: ஒரு கட்டத்தில் கொரோனா பரவல் உச்சத்திலிருந்து தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பும், பாசிட்டிவ் விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலே பெரும்பாலான மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வரும் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்து அறிவிக்கப்படவுள்ள தளர்வுகளில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் சென்னை
தொடர்ந்து 25ஆவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் 11805 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு காலத்தில் வைரஸ் பரவல் உச்சத்திலிருந்த தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தினசரி பாதிப்பு
சென்னையில் இன்று 28,281 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 793 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை தொடங்கிய பிறகு தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 800க்கும் கீழாகக் குறைவது இதுவே முதல்முறையாகும். இன்று மட்டும் சென்னையில் 1777 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாசிடிவ் விகிதம்
அதேபோல கொரோனா பாசிடிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. மே 2ஆவது வாரத்தில் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகபட்சமாக 27% வரை சென்றது. ஆனால், அதன் பிறகு மெல்லக் குறைந்தே வந்தது. தற்போது கொரோனா பாசிடிவ் விகிதம் சென்னையில் 2.8%ஆக உள்ளது. கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% கீழாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசியு படுக்கைகள்
தற்போது சென்னையில் 7476 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தலைநகரில் 66% ஐசியு படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. அதேபோல ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 21% மட்டுமே நிரம்பியுள்ளன. சென்னையில் கொரோனா குறையத் தொடங்கியிருந்தாலும், கோவையில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இன்று கோவையில் 1563 பேருக்கும் ஈரோட்டில் 1270 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.